கொழும்பு: இந்திய அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் 135 டாட் பால்களை வீசியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 24.1 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்து விளையாடி வந்தது. அப்போது திடீரென மழை பெய்ய நிலையில், ஆட்டம் ரிசர்வ் நாளிற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்றைய ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணியின் விராட் கோலி - கேஎல் ராகுல் இருவரும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி வரை ஆட்டமிக்காமல் ஆடிய கேஎல் ராகுல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6வது சதத்தையும், விராட் கோலி 47வது ஒருநாள் சதத்தையும் விளாசினர். சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 106 பந்துகளில் 111 ரன்களும், விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களும் விளாசினர்.
மொத்தமாக இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் 6 பந்துவீச்சாளர்களும் இணைந்து மொத்தமாக 135 டாட் பால்களை வீசியுள்ளனர். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 135 டாட் பால்கள் வீசியும் எப்படி இந்திய அணியால் 350க்கும் அதிகமான ரன்களை விளாச முடிந்தது என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய அணி வீரர்கள் பவுண்டரிகள் மூலம் அதிக ரன்களை சேர்த்துள்ளது தெரிய வந்துள்ளது. ரோகித் சர்மா விளாசிய 56 ரன்களில் 48 ரன்கள் சிக்சர் மற்றும் பவுண்டரிகள் மூலமாக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் சுப்மன் கில் சேர்த்த 58 ரன்களில் 40 ரன்கள் பவுண்டரிகள் மூலமாக சேர்க்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேஎல் ராகுலின் 111 ரன்களில் 54 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்சர் மூலமாகவும், விராட் கோலியின் 122 ரன்களில் 60 ரன்கள் பவுண்டரிகள் மற்றும் சிக்சர் மூலமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அணி தரப்பில் மொத்தமாக 37 பவுண்டரிகளும், 9 சிக்சர்களும் விளாசப்பட்டது. இதன் மூலம் இந்திய அணி சேர்த்த 356 ரன்களில் 202 ரன்கள் பவுண்டரிகள் மூலமாகவே சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.