கொழும்பு: இந்திய அணியின் ஜடேஜா வீசிய பந்தில் பாகிஸ்தான் வீரர் சல்மான் ஸ்வீப் ஷாட் ஆட முயன்ற போது, அந்த பந்து பேட்டில் பட்டு முகத்தை அடித்தது. இதனால் பாகிஸ்தான் வீரர் சல்மானின் முகத்தில் இருந்து ரத்தம் வழிந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 ஆட்டம் கொழும்புவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் 24.1 ஓவர்களில் இந்திய அணி 147 ரன்கள் சேர்த்திருந்த போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் ரிசர்வ் நாளிற்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்றைய நாளில் ஆட்டம் தொடங்கிய நிலையில், இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்தது.

இந்திய அணியின் விராட் கோலி 122 ரன்களும், கேஎல் ராகுல் 111 ரன்களும் விளாசி கடைசி பந்து வரை களத்தில் இருந்தனர். இதன்பின் பாகிஸ்தான் அணி 357 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது. அப்போது தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 9 ரன்களில் பும்ரா வேகத்தில் ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் போல்டானார்.
பின்னர் மழை குறுக்கிட சில மணி நேரம் தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரிலேயே ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஃபகர் ஜமான் குல்தீப் யாதவ் வேகத்தில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் பாகிஸ்தான் அணியின் இஃப்திகார் அஹ்மத் - சல்மான் கூட்டணி நிதானமாக ஆடியது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். 21வது ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா வீச, அதனை சல்மான் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார். ஆனால் அந்த பந்து பேட்டில் பட்டு, திடீரென முகத்தில் அடித்தது. சரியாக கண்களுக்கு கீழ் பந்து அடித்து சென்றதால், ரத்தம் அதிகமாக வழிந்தது. இதில் பந்து முகத்தில் பட்ட உடனே, இந்திய வீரர் கேஎல் ராகுல் உடனடியாக சல்மான் முகத்தை சோதனை செய்தார்.
பின்னர் ரத்தம் வழிவதை கண்டு ராகுல் சல்மானிடம் கூற, உடனடியாக பாகிஸ்தான் ஃபிசியோ வந்து சிகிச்சை அளித்தார். இந்த காயத்திற்கு சல்மான் ஹெல்மட் அணியாததே காரணமாக அமைந்தது. ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் போது பாகிஸ்தான் வீரர்கள் ஹெல்மாட் அணியாமல் விளையாடி வருகின்றனர். இந்த காயத்திற்கு பின் உடனடியாக ஹெல்மட் அணிந்துகொண்ட சல்மான், பின்னர் ரன்கள் சேர்க்க தொடங்கினார். இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் வீரருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.