கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மழை காரணமாக இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டம் பாதியிலே தடைப்பட்டு தற்போது ரிசர்வ் டேவில் நடத்தப்பட உள்ளது.
இது சூப்பர் ஃபோர் சுற்றில் மற்ற அணிகளுக்கு தரப்படாமல் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்திற்கு மட்டும் இந்த ஸ்பெஷல் வசதி கொடுக்கப்பட்டிருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு தற்போது இந்த ரிசர்வ் டே பெரிய சிக்கல் ஒன்றை கொடுக்கப் போகிறது. அதாவது நாளை மழை பெய்யாமல் இருந்தால் 50 ஓவர் போட்டிகள் முழுமையாக நடைபெறும். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய அணி வீரர்கள் 15 மணி நேர இடைவேளையில் இரண்டு முக்கிய ஆட்டத்தில் விளையாடப் போகிறார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெறும் 24 ஓவர் மட்டும்தான் பேட்டிங் செய்து இருக்கிறது.
எஞ்சியுள்ள 26 ஓவர் பேட்டிங் முடிந்த பிறகு மீண்டும் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் 50 ஓவர்களை வீச வேண்டும். அந்தப் போட்டி முடிவதற்குள் இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிடும் என வைத்துக் கொள்வோம். அதன் பிறகு வெறும் 15 மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணி வீரர்கள் இலங்கைக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் விளையாட இருக்கிறார்கள்.
இது காயத்திலிருந்து திரும்பி வந்திருக்கும் கே எல் ராகுல், பும்ரா போன்ற வீரர்களுக்கு பெரிய நெருக்கடியை உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படுத்தும். ஏற்கனவே ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து ஒரே ஒரு போட்டியில் தான் விளையாடி இருந்தார்.இந்த நிலையில் மீண்டும் அவருக்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இந்திய வீரர்களின் நிலை இப்படி இருக்க அவர்களால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விளையாட முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள கிரிக்கெட் வல்லுநர்கள் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வீரர்களால் விளையாட முடிகிறது. பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து இரண்டு நாட்கள் கூட டெஸ்ட் போட்டியில் பந்து வீசுவார்கள். இதனால் ஓய்வின்றி இந்திய அணி வீரர்கள் விளையாடுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்று கூறியிருக்கிறார்கள்.