கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் போர் லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டத்திற்கு மட்டும் ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது. நேற்று ஆட்டம் தொடங்கிய போது வெயில் சுட்டெரித்தாலும் திடீரென்று யாருமே எதிர்பார்க்காத வகையில் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் போட்டி தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக ரிசர்வ் டேவில் ஆட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போட்டி தடைபட்டபோது இந்தியா எந்த ஓவரில் பேட்டிங் செய்ததோ அதிலிருந்து தொடங்கி 50 ஓவர் முடியும் வரை விளையாடும். அதன் பிறகு பாகிஸ்தான் அணி 50 ஓவர் பேட்டிங் செய்யும்.

இந்த நிலையில் கொழும்புவில் திங்கட்கிழமையான இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் போட்டி தொடங்கி இரண்டு மணி நேரம் வரை நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு கனமழை பெய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ரிசர்வ் டேவில் நடைபெறும் ஆட்டமும் மழையால் தடைபடும் சூழல் உள்ளது.
அது மட்டுமல்லாமல் கொழும்புவில் நடைபெறும் இதர போட்டிகளுமே வரும் நாட்களில் மழையால் தடைபடும் சூழல் உருவாகும். ஒருவேளை ஆட்டத்தையே நிறுத்தும் அளவிற்கு மழை பெய்யவில்லை என்றாலும் ஆட்டத்தை பாதிக்கும் அளவிற்கு மழை நிச்சயம் இருக்கும். இதனால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியே ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத் தொடராக அமைந்து விட்டது. கொழும்புவில் இருந்து போட்டி மாற்றப்படுமா இல்லை ஆசியக் கோப்பை தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்படுமா என்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளது.
இலங்கையில் தென்பகுதியில் உள்ள ஹம்பந்தோட்டாவில் தற்போது மழை இல்லை என்றாலும் அங்கு சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டதே தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக உள்ளது. ஆசியக் கோப்பை போட்டிக்கு இவ்வளவு சிக்கல் மழையால் ஏற்படுகிறது என்றால் அக்டோபர் நவம்பர் மாதத்தில் மழைக்காலத்தில் நடைபெறும் உலக கோப்பை தொடருக்கு என்னென்ன சிக்கல் எழப்போகிறதோ என்ற கலக்கம் ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்து விட்டது.