அகமதாபாத் : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று மிகப்பெரிய போட்டியாக இந்தியா பாகிஸ்தான் மோதுகிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இந்தப் போட்டியை காண சுமார் ஒன்றரை லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் டிக்கெட்டுகளை பெற்றிருக்கிறார்கள். போட்டி 1.30 மணிக்கு தொடங்கப்பட உள்ள நிலையில், காலை 7 மணியிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் நரேந்திர மோடி மைதானம் முன்பு திரண்டனர்.

இதனால் அந்த இடமே திருவிழா போல் காட்சியளித்தது. நேரம் ஆக ஆக தற்போது மைதானம் வெளியே கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கிறது. இதனால் கூடுதலான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். மேலும் ரசிகர்கள் பெரும்பாலானோர் இந்தியாவின் நீல நிற ஜெர்சியை அணிந்து கொண்டு போட்டியை பார்க்க வந்திருக்கிறார்கள்.
மேலும் இந்த போட்டியை காண பாகிஸ்தான் ரசிகர்கள் சிலரும் வந்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இந்த கூட்டத்தில் வெறும் கடல் போல் நீல நிற ஜெர்சி தான் தெரிந்ததே தவிர பச்சை நிற பாகிஸ்தான் ஜெர்சி ஒன்றுகூட தெரியவில்லை. எனினும் பாகிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் இருந்தால் அவர்களுக்கு எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படக்கூடாது என்பதற்காக தீவிர கண்காணிப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
மைதானத்தில் ஒவ்வொரு கேலரியிலும் பல போலீசார் குவிக்கப்பட்டு பார்வையாளர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த கண்காணிப்பு பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த போட்டியை காணவந்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் குடிதண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மைதானம் முழுவதும் 100 உணவு கடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு கிரிக்கெட் போட்டியை அதிக மக்கள் வந்து பார்த்தது இதுவாகத்தான் இருக்கும் என்ற புதிய சாதனையை இந்த போட்டி படைக்க இருக்கிறது.