கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி சூப்பர் ஃபோர் சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது. உலகக் கோப்பை தொடருக்கு முன்பு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டமாக இது கருதப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்துவீச்சாளர்கள் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ரோகித் சர்மா வலியுறுத்தி இருந்தார். இதேபோன்று பேட்டிங் செய்யத் தெரிந்த வீரர்கள் பந்துவீச்சிலும் பயிற்சி செய்ய வேண்டும் என்று இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

இதன் மூலம் போட்டியின் போது ஏதேனும் ஒரு பந்துவீச்சாளர் அதிக ரன்களை கொடுத்து விட்டால் அதனை சமாளிப்பதற்காக கூடுதல் பந்துவீச்சாளர் வேண்டும் என்ற முடிவில் ராகுல் டிராவிட் இருக்கிறார். இதற்காக நேற்றைய பயிற்சியில் சூரிய குமார் யாதவுக்கு பந்து வீசும் பயிற்சி வழங்கப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, பிறகு நடுவரிசை வீரர்கள் தான் அணியை காப்பாற்றினர். இதில் பும்ரா சில ரன்களை எடுத்தார். இது குறித்து பேசிய ரோகித் சர்மா பேட்டிங் தெரிந்த பவுலர்கள் இருந்தால் கூடுதலாக ஒரு 10,15 ரன்கள் அடித்து இருந்தால் அது இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பை கொடுக்கும் என்று கூறினார்.
இதனால் தற்போது முகமது சிராஜ் போன்ற பந்துவீச்சாளருக்கு நேற்று பேட்டிங் பயிற்சி வழங்கப்பட்டது. எனினும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இந்திய அணி நிர்வாகம் உலகக்கோப்பை தொடருக்கு முன்பு இந்த முடிவை எடுத்திருப்பது நேரத்தை வீணடிப்பதற்கு சமம் என்று குற்றம் சாட்டியுள்ளனர். சூரியகுமார் யாதவ் இதுவரை எந்த போட்டியிலும் பந்து வீசியதே இல்லை.
இந்த நிலையில் அவரை பாகிஸ்தானுக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் பந்து வீச சொன்னால் அவர் அதிக ரன்கள் கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஏற்கனவே நடந்து முடிந்த ஆட்டங்களில் சூரிய குமாரை ஒன்று அல்லது இரண்டு ஓவராவது பந்து வீச சொல்லி இருக்க வேண்டும். அப்படி உங்களுக்கு பந்து வீச தெரிந்த பேட்ஸ்மேன் தான் வேண்டுமென்றால் திலக் வர்மாவை அணியில் எடுத்திருக்கலாம்.இப்படி தவறான முடிவை எடுத்து குழப்பமான சூழலை அணி நிர்வாகம் எடுப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.