கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டத்தில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்துகிறது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெயில் அடிப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது போன்ற சூழலில் முதலில் பேட்டிங் செய்வது சிறப்பான நேரமாக இருக்கும். ஆனால் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் ஆடுகளத்தில் சிறிய அளவில் ஈரப்பதம் இருக்கிறது. அதனை பயன்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் எப்போதுமே கடும் நெருக்கடியை உண்டாக்கும். ஆனால் நாங்கள் இதை மற்ற போட்டிகளை போல் தான் கருதுகிறோம். ஒரு அணியாக வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள்.
இந்தப் போட்டி மீது தான் எங்களுடைய கவனம் இருக்கிறது. எங்களுடைய அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று பாபர் அசாம் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் ரோகித் சர்மா, நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் இருந்தோம். இதனால், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆட்டத்தின் முதலிலே கடும் சவால்கள் இருக்கும்.
எனினும் பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த முறை நாங்கள் விளையாடிய விதம் நிச்சயம் எங்களுக்கு இம்முறை உத்வேகத்தை அளிக்கிறது. பாகிஸ்தான் ஆட்டம் மட்டுமல்ல அனைத்து போட்டிகளுமே எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது தான். நாங்கள் ஒரு நேரத்தில் ஒரு போட்டி என்ற அளவில்தான் எங்களுடைய கவனம் இருக்கிறது.
மழையால் எங்களுக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது. இதுதான் கிரிக்கெட்டின் இயல்பே. இந்த ஓய்வு நேரத்தை நாங்கள் எங்களை தயார்படுத்திக் கொள்ள சிறப்பாக பயன்படுத்திக் கொண்டோம். இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம் என்று நம்புகிறேன். இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கிறது. முகமது சமிக்கு பதிலாக பும்ரா திரும்பி இருக்கிறார். இதே போல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு பதில் கே எல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார்.