பாலக்கலே: பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி, ரோகித் சர்மாவுக்கு வீசிய பந்தால் மிரண்டு போன விராட் கோலியின் ரியாக்சன் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 87 ரன்களும், இஷான் கிஷன் 82 ரன்களும் விளாசினர். பாகிஸ்தான் அணி தரப்பில் ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதில் இந்திய அணியின் ரோகித் சர்மா 11 ரன்களிலும், விராட் கோலி 4 ரன்களிலும் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்டாகினர். ஷாகின் அப்ரிடி வீசிய முதல் இரு ஓவர்களில் ரோகித் சர்மா அவரை சிறப்பாக எதிர்கொண்டார். இருப்பினும் ஷாகின் அப்ரிடியின் ஒவ்வொரு பந்தும் பாம்பை போல் ஸ்விங்காகி மிரட்டியது.
ரோகித் சர்மாவுக்கு இரு அவுட் ஸ்விங்கர்களை வீசிய ஷாகின் அப்ரிடி, 5வது பந்தில் இன்ஸ்விங்கரை வீசி விக்கெட் வீழ்த்தினார். அதில் ரோகித் சர்மாவுக்கு வீசப்பட்ட அவுட் ஸ்விங்கர் பந்துகளை ஹெல்மெட் அணிந்தவாறு ஓய்வறையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி, மிரண்டு போய் கண்களை உருட்டி ரியாக்சன் கொடுத்தார். இதனை தொலைக்காட்சி கேமராமேன் சரியாக படம்பிடிக்க, விராட் கோலியின் ரியாக்சன் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இதன்பின் களமிறங்கிய விராட் கோலி, அதேபோல் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். 2021ஆம் ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களிடம் 4 முறை ஆட்டமிழந்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் 87 பந்துகளில் 98 ரன்கள் விளாசியுள்ள விராட் கோலியின் பேட்டிங் சராசரி வெறும் 21.75 ஆக மட்டுமே இருக்கிறது. இதன் மூலம் இடதுகை பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி பிரச்சனைகளை உணர்வது உறுதியாகியுள்ளது.