கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டுள்ளதற்கு பின் உள்ள காரணம் பற்றி பார்க்கலாம்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்புவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய பணித்துள்ளது. பாகிஸ்தான் அணி பலம் வாய்ந்த பந்துவீச்சை கொண்டுள்ளதால், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். நட்சத்திர வீரர் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில், முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து ரோகித் சர்மா பேசுகையில், ஸ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி நேரத்தில் முதுகு பிடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்த காரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தமிழ் வர்ணனையாளர்கள் மத்தியில் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்திய பிளேயிங் லெவன் அறிவிக்கப்படுவதற்கு முன், ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் களமிறங்க மாட்டார் என்று முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் சொல்லிக் கொண்டே இருந்தார்.
அவர் சொல்லியதை போல் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். இதனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வர்ணனையாளர்கள் ஸ்ரீகாந்த் சொல்லியதை போல் நடப்பதாக கிண்டல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சே காரணம் என்று சொல்லப்படுகிறது. ஸ்பின்னர்களுக்கு எதிராக பலம் வாய்ந்த வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், வேகப்பந்துவீச்சாளர்களிடம் ஷார்ட் பாலில் திணறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் கூட ஹாரிஸ் ராஃப் வீசிய ஷார்ட் பாலில் தான் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார். தற்போது பாகிஸ்தான் அணியில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இருப்பதே ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இஷான் கிஷன் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், அவரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்று இந்திய அணி திட்டமிட்டு களமிறக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.