கொழும்பு: ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று நடக்கவுள்ளது. கொழும்புவில் கனமழை பெய்வதாக கூறப்பட்ட நிலையில், இலங்கை - வங்கதேசம் இடையிலான ஆட்டத்தின் போது மழை குறுக்கீடே இல்லை. இதனால் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது மழை குறுக்கீடு இருக்காது என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை மழை பெய்தாலும், ஆட்டம் எந்த ஓவருடன் நிறுத்தப்பட்டதோ, அதே ஓவரில் இருந்து மீண்டும் அடுத்த நாள் ஆட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் டே இருப்பதால், நிச்சயம் கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை ஆட்டம் முழுமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி தரப்பில் பிளேயிங் லெவன் நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு ஸ்பின்னரை குறைத்து 4வது வேகப்பந்துவீச்சாளரை அந்த அணி இணைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கேஎல் ராகுலின் வரவால் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் முழுமையான ஓய்வுக்கு பின் கேஎல் ராகுல் நேரடியாக இந்திய அணிக்கு திரும்பியுள்ளார். உலகக்கோப்பை நெருங்குவதால் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுப்பது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
இதனால் மிடில் ஆர்டரில் மாற்றங்கள் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இருவரில் ஒருவர் நிச்சயம் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. இதில் இஷான் கிஷன் அட்டகாசமான ஃபார்மில் இருப்பதோடு, இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் அவரை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக திணறும் ஸ்ரேயாஸ் ஐயர் பெஞ்ச் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
அதேபோல் தனது முதல் குழந்தை பிறப்புக்கு மும்பை சென்ற பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் முகமது சிராஜ் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் சிராஜ் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். மறுபக்கம் ஷமி கட்டுக்கோப்புடன் பந்துவீசினார். இதனால் தொடக்க வீரரகளாக ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, இஷான் கிஷன், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இந்திய அணி பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.