கொழும்பு: பாகிஸ்தான் அணியின் எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக கேல் ராகுல் அல்லது இஷான் கிஷன் இருவரில் யார் இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் களமிறங்கவுள்ள பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த போட்டியில் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் பாகிஸ்தான் அணி களமிறங்கிய நிலையில், தற்போது 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியுள்ளார். நேற்றைய பயிற்சியின் போது கேஎல் ராகுல் தீவிரமாக கீப்பிங் பயிற்சியிலும் ஈடுபட்டார். அதேபோல் 3 செஷன்கள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் முன்னிலையில் வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டார். இதனால் கேஎல் ராகுல் நாளைய போட்டியில் இடம்பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 66 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போதும் அசராமல் பாகிஸ்தான் அணி பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்ய தொடங்கினார். சிறப்பாக ஆடிய அவர் 82 ரன்கள் எடுத்து அசத்த, இஷான் கிஷன் மீதான ரசிகர்களின் நம்பிக்கையும் அதிகரித்தது. ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 அரைசதங்களை விளாசிய சாதனை படைத்ததோடு, மிடில் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன் என்ற சாதகத்தை இஷான் கிஷன் ஏற்படுத்தினார்.
இதன் காரணமாக இந்திய அணியில் கேஎல் ராகுல் அல்லது இஷான் கிஷன் இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. இருப்பினும் நாளைய ஆட்டத்தில் இருவருமே களமிறங்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தான் அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதால், ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.