வலுக்கும் எதிர்ப்புகள்.. இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்படாது - பி.சி.சி.ஐ துணைத்தலைவர்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பி.சி.சி.ஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பித்து விட்டது.
முதல் சுற்று ஆட்டங்களும், பயிற்சி போட்டிகளிலும் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து சூப்பர் 12 சுற்று ஆட்டங்களும் நடைபெற இருக்கிறது.
இந்த உலககோப்பையில் மிகவும் அதிகம் எதிர்பாக்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் வருகிற 24-ம் தேதி நடைபெறுகிறது. உலககோப்பை தொடரில்தான் இந்த இரு நேரடியாக கிரிக்கெட்டில் மோதிக்கொள்கின்றன.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம்
இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ள நிலையில் இந்த ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதால் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை நடத்துவதில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் முதன்முதலாக கருத்து கூறியுள்ளார்.

நிலைமை சரியில்லை
பஞ்சாப் அமைச்சர் பர்கத் சிங், ''டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும். ஏனென்றால் எல்லையில் நிலைமை சரியில்லை. இரு நாடுகளும் தற்போது அழுத்தமான காலகட்டத்தில் உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் எதையும் செய்யக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ துணைத் தலைவர்
இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பி.சி.சி.ஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 'ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் கொலைகளை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை நிகழ்த்தி பயங்கரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐ.சி.சி கட்டுப்பாட்டின் கீழ்..
''டி 20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி ஐ.சி.சி கட்டுப்பாட்டின் கீழ் நடந்து வருகிறது. ஐ.சி.சி.யின் சர்வதேச போட்டிகளின் கீழ் நீங்கள் எந்த அணிக்கும் எதிராக விளையாட மறுக்க முடியாது. ஐசிசி போட்டிகளில் கண்டிப்பாக விளையாட வேண்டும். எனவே இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் ரத்து செய்ய முடியாது என்று ராஜீவ் சுக்லா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications