சென்னை : சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இன்று சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ஏதேனும் பந்த் அறிவித்திருக்கிறார்களா என்று மக்கள் சந்தேகம் அடைய வேண்டாம்.
இதற்கு இன்று இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது தான் முக்கிய காரணம். உலகம் முழுவதும் இந்த போட்டியை காண ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எப்போதுமே கரை புரண்டு ஓடும்.

அந்த வகையில் தமிழக கிரிக்கெட் ரசிகர்களும் இன்று ஒரு நாள் தங்களுக்கு இருக்கும் அனைத்து பணிகளையும் தள்ளிப் போட்டு வைத்திருக்கிறார்கள். இன்று மதியம் 1.30 மணியிலிருந்து இரவு முடியும் வரை தெருவில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. பொதுவாக இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் தான் டிஆர்பி மிகவும் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இந்தியாவை இந்திய மண்ணில் எதிர்கொள்கிறது.
இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை காண காத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட தோற்றதில்லை விளையாடிய ஏழு முறைகளும் இந்திய அணியே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் 8வது முறையாக இந்தியா வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
மேலும் தற்போது உள்ள பாகிஸ்தான் அணியும் பேட்டிங்கில் வலுவாக இருக்கிறது. பந்துவீச்சில் ஷாகின் ஆப்ரிடி, ஹரிஷ் ரவுப் போன்ற வீரர்களும் இருக்கிறார்கள். இதனால் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. எப்படி கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போது விறுவிறுப்பாக இருந்ததோ அதேபோல் பல மடங்கு இன்று விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகன் மத்தியில் இருக்கிறது.