இந்தியா, பாகிஸ்தான் புகார்.. கிரவுண்டா இது? பேக் வைக்கக்கூட இடமில்லை.. ஆசிய விளையாட்டு போட்டி சர்ச்சை
மும்பை: ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் போட்டிகளுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள மைதானம் மற்றும் தங்குமிட வசதிகள் மிகவும் மோசமாக உள்ளதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
வரும் செப்டம்பர் 17 அன்று ஜப்பானின் நகோயா நகருக்கு அருகில் உள்ள நிஷின் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இப்போட்டிகள் நடைபெறும் 'கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க்' மைதானம், ஒரு பேஸ்பால் மைதானம் ஆகும். அது கிரிக்கெட் மைதானமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதன் எல்லைக் கோட்டிற்கு வெளியே இன்னும் பேஸ்பால் வீசுவதற்கான மண் மேடு அப்படியே உள்ளது.

மேலும், இங்கு முறையான டிரஸ்ஸிங் ரூம் வசதிகள் இல்லை என்றும், புதிதாக அமைக்கப்பட்ட இந்த ஆடுகளம் கடந்த மே மாதத்தில் ஒரே ஒரு சிறிய தொடரில் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளது என்பதால் அதன் உறுதித்தன்மை குறித்து பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இதோடு மட்டுமல்லாமல், வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகள் மிகவும் சிறியதாக இருப்பதால், அதில் கிரிக்கெட் கிட் பேக்குகளை வைப்பதற்கு கூட இடமில்லை என வீரர்கள் கவலை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் எழுப்பப்பட்ட இந்த விவகாரத்தைத் தொடர்ந்து பிசிசிஐ, இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்களும் ஏசிசி கூட்டத்தில் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளன. இந்திய ஒலிம்பிக் சங்கத்திடமும் பிசிசிஐ இது குறித்து முறையிட்டுள்ளது. இதனை அடுத்து, பிரதிநிதிகளை அனுப்பி மைதானம் மற்றும் தங்குமிடங்களை நேரில் ஆய்வு செய்யப் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்தியப் பெண்கள் அணி செப்டம்பர் 17 அன்றும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான ஆண்கள் அணி செப்டம்பர் 28 அன்றும் தங்களது ஆட்டங்களைத் தொடங்குகின்றன. இதற்காக இரு அணிகளும் செப்டம்பர் 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஜப்பான் புறப்பட உள்ளன. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் அதற்கு முன்னோட்டமாக நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி தொடரில், அடிப்படை வசதிகள் கூட இல்லாதது ஆசிய நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
