கொல்கத்தா: இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை மத்திய அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் உட்பட அனைவரது ஆதரவு இல்லாமல் இத்தொடரை வெற்றிகரமாக நடத்திவிட முடியாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் டால்மியா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் டிசம்பரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 2 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்தப் போட்டிகளை நடத்துவது தொடர்பான ஒப்பந்தம் இருநாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர்களிடையே கொல்கத்தாவில் நேற்று கையெழுத்தானது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷாகர்யார் கான், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் டிசம்பரில் தொடங்குகின்றன. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியா, உள்துறை அமைச்சகம், மத்திய அரசு ஆகியவற்றின் ஒப்புதல் இல்லாமல் இந்த போட்டிகளை நடத்த முடியாது. அனைவரது ஒப்புதலுடன் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையே அடுத்த 8 ஆண்டுகளில் 5 இருதரப்பு தொடர்களை நடத்தவும் இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டித்தொடர்களை நடத்தக்கூடாது என்று கூறியுள்ள முன்னாள் உள்துறை செயலரும் பாரதிய ஜனதா எம்.பியுமான ஆர்.கே.சிங், இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கு காரணமான தீவிரவாதிகளுக்கு புகலிடம் வழங்கும் பாகிஸ்தானோடு கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் தேவை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.