மும்பை: ஐசிசி டி20 உலககோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியான இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் நாளை கொழும்பில் நடைபெறுகிறது. நடப்பு தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளன. இதில் வெல்லும் அணி, குரூப் ஏ பிரிவிலிருந்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறும் முதல் அணியாகும்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக, ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுனர்களில் வாயில் இருக்கும் ஒரே பெயர் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் தான். அதற்கு காரணம், அவருடைய வித்தியாசமான சுழற்பந்துவீச்சு ஸ்டைல் தான். இதனால், சிலர் உஸ்மான் தாரீக் பந்தை விதிகளுக்கு மீறி எறிவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தாரீக் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிகிறது.

இந்த நிலையில், உஸ்மான் தாரீக் மீதான புகாரை மறுத்துள்ள பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "ஐசிசி அவரை பரிசோதித்து இரண்டு முறை அனுமதித்துள்ளது. இதில் என்ன பெரிய விவாதம் என்றே எனக்குத் தெரியவில்லை. அவர் விளையாடத் தொடங்கியதிலிருந்தே அவரது நடவடிக்கையைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர், ஆகையால் அவர் இவற்றுக்கு பழகிவிட்டார்," என்றும் கூறினார்.
30 வயதான உஸ்மான் தாரிக் பாகிஸ்தான் அணிக்காக இதுவரை நான்கு டி20 போட்டிகளில் விளையாடி, 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2025 நவம்பர் 1 அன்று லாகூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் அவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் நான்கு ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
தாரிக் தனது இரண்டாவது டி20 போட்டியில், 2025 நவம்பர் 23 அன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்த டி20 உலகக் கோப்பையில், அமெரிக்காவிற்கு எதிரான அறிமுகப் போட்டியில், நான்கு ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ஒட்டுமொத்த T20 கிரிக்கெட்டில் உஸ்மான் தாரிக், 42 போட்டிகளில் விளையாடி 70 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக, தனது கடைசி 10 டி20 போட்டிகளிலேயே அவர் 25 பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார் என்பது அவரது தற்போதைய ஃபார்மை எடுத்துக்காட்டுகிறது. உஸ்மான் தாரீக்கை கவனமாக இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று ஹர்பஜன் சிங், கிளார்க் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர்.