டெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியா மீது தாக்குதல் நடத்தி வருவது குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அமைதியாக இருக்க வாய்ப்பு கிடைத்தும் பாகிஸ்தான் போரைத் தேர்வு செய்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
அவரது விமர்சனம் சமூக வலைத்தளங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. முன்னாள் வீரர்கள் ஆன வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரும் பாகிஸ்தானுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் தாக்குதல் குறித்து வீரேந்தர் சேவாக் வெளியிட்டு இருக்கும் பதிவில், "அமைதியாக இருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தும் பாகிஸ்தான் போரைத் தேர்வு செய்து இருக்கிறது. அவர்கள் நாட்டில் இருக்கும் தீவிரவாத குழுக்களைப் பாதுகாப்பதற்காக இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். இதுவே பாகிஸ்தான் யார் என்பதைப் பற்றி உலகுக்குச் சொல்லும். நமது படைகள் மிகவும் சரியான முறையில் பதிலடி கொடுத்திருக்கின்றன. பாகிஸ்தான் இதை மறக்க முடியாத வகையில் பதிலடி கொடுத்து இருக்கின்றன" என்று கூறியிருக்கிறார்.
முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள பதிவில், "பாகிஸ்தான் என்ன ஒரு முழுமையான முரட்டுத்தனமான நாடு. அவர்கள் எப்படி தாக்குகிறார்களோ, இந்தியாவும் அதன்படியே தாக்கும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
ஷிகர் தவான் வெளியிட்டு இருக்கும் இந்தப் பதிவில் இந்திய ராணுவ வீரர்களுக்கு மரியாதை அளித்திருக்கிறார். "நமது எல்லைகளை இவ்வளவு வலிமையுடன் பாதுகாத்து, ஜம்மு மீதான ட்ரோன் தாக்குதலைத் தடுத்து நிறுத்திய நமது துணிச்சலான இதயங்களுக்கு நான் மரியாதை செலுத்த விரும்புகிறேன். இந்தியா வலுவாக நிற்கிறது. ஜெய்ஹிந்த்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது பதிவில், "பயங்கரவாதத்திற்கு எதிராக நமது தேசத்தை காப்பாற்ற போராடும் இந்திய ஆயுதப் படைகளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த நேரத்தில் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய நமது பங்களிப்பைச் செலுத்தி, வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்வோம்" என்று கூறியிருக்கிறார்.
வீரேந்தர் சேவாக் உள்ளிட்ட மற்ற கிரிக்கெட் வீரர்களும் இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானைக் கண்டித்தும் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். ஆனால், அம்பத்தி ராயுடு சர்ச்சைக்குரிய வகையில் பதிவை வெளியிட்டு எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார்.