கொழும்பு: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று (அக்டோபர் 5) இலங்கையின் கொழும்பு, ஆர். பிரேமதாசா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆனால், இந்த போட்டியின் இடையே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்னவாகும், 'ரிசர்வ் டே' எனப்படும் மாற்று நாள் உள்ளதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதே போல, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, இரு நாடுகளிலும் நடைபெறாமல், இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் நடத்தப்படுவதற்கும் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் எல்லைப் பதற்றம் காரணமாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் (பிசிபி) ஒரு ஒப்பந்தத்தைச் செய்துள்ளன. அதன்படி, 2028 ஆம் ஆண்டு வரை இரு அணிகளும் மோதும் போட்டிகள் நடுநிலை மைதானங்களிலேயே நடத்தப்படும். அதன் ஒரு பகுதியாகவே, இந்த உலகக் கோப்பை போட்டிக்கு கொழும்பு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை, கொழும்பில் பெய்யும் கனமழையால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்தப் போட்டி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால், போட்டியை மீண்டும் நடத்த 'ரிசர்வ் டே' கிடையாது.
இது உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டி என்பதால், இதற்கு மாற்று நாள் ஒதுக்கப்படவில்லை. ஐசிசி விதிகளின்படி, நாக்-அவுட் சுற்றுகளான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு மட்டுமே 'ரிசர்வ் டே' வழங்கப்படும். எனவே, இந்தப் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்டால், போட்டி 'முடிவு எட்டப்படவில்லை' (No Result) என அறிவிக்கப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும்.
வானிலை அறிக்கைகளின்படி, இன்று கொழும்பில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன. பிரபல வானிலை ஆய்வு தளங்களின் கணிப்பின்படி, பகல் நேரத்தில் மழை பெய்வதற்கு 100% வரை வாய்ப்புள்ளது. இந்த வானிலை காரணமாக, போட்டி தொடங்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்படலாம். அதாவது, 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக இல்லாமல், 20 அல்லது 30 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், மழை தொடர்ந்து பெய்தால், போட்டி ரத்து செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகமாக உள்ளன. இதே கொழும்பு மைதானத்தில் முன்னதாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டியும் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.