மும்பை: ஐசிசி உலகக்கோப்பைத் தொடரில் அக்.15ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா - பாகிஸ்தான் போட்டி, தேதி மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ மற்றும் ஐசிசி நிர்வாகிகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மாத இறுதியில் ஐசிசி உலகக்கோப்பைத் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் அக்.5ஆம் தேதி முதல் நவ.12ஆம் தேதி வரை லீக் சுற்றுப் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அணி 9 மைதானங்களிலும் லீக் சுற்றில் விளையாடவுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாமடைந்துள்ளனர்.

குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் அக்.15ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்க உள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஆட்டம் நடப்பதால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்குவதற்கு முன்பாக ரசிகர்கள் பலரும் ஹோட்டல் முன்பதிவு மற்றும் பயணத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை திட்டமிட தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஹோட்டல்களில் பலரும் ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து முன்பதிவு செய்துள்ளனர். ஒருவேளை தேதி மாற்றம் செய்யப்பட்டால், மீண்டும் ஹோட்டல் நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முன்பதிவு செய்வதே ரசிகர்களுக்கு பெரும் போராட்டமாக மாறிவிடும். இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை தேதி மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 15ஆம் தேதி நவராத்திரி திருவிழாவின் முதல் நாள் கொண்டாடப்படவுள்ளது. நவராத்தியின் முதல் நாள் என்பதால், பொதுமக்கள் பலரும் திருவிழாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ரசிகர்கள் பயணம் செய்வதற்கும், தங்குவதற்கும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், தேதி மாற்றம் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் அக்.15ஆம் தேதி முன்னதாக அக்.14ஆம் தேதியே இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ உயர்மட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் அகமதாபாத் நகரத்தை நோக்கி வருவார்கள். நவராத்திரியன்று பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால், தேதி மாற்றம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.