அகமதாபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதிக் கொள்ளும் ஆட்டத்தில் பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக அகமதாபாத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு வருகின்றனர்.
ஏற்கனவே டாசின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் பேசும் போது அகமதாபாத் ரசிகர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் 36 ரன்களும், அப்துல்லா ஷபிக் 20 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்த நிலையில் போட்டியின் போது இடைவேளை எடுக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் ஆதிபுருஷ் படத்திலிருந்து ஜெய் ஸ்ரீராம் பாடல் மைதானத்தில் ஒளிபரப்பப்பட்டது. அதுவரை அமைதியாக இருந்த ரசிகர்கள் அனைவரும் ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷங்களை எழுப்ப தொடங்கினர். எப்போதும் இந்தியா போட்டிகள் விளையாடும் போது சக்டே இந்தியா என்ற பாடலும் ஜெய் ஹோ என்ற பாடலும் தான் ஒளிபரப்பப்படும்.
இல்லையெனில் ஏ ஆர் ரகுமானின் வந்தே மாதரம் பாடல் மைதானத்தில் எப்போதும் ஒளிபரப்பப்படும். ஆனால் தற்போது போட்டி அகமதாபாத்தில் நடைபெறுவதால் அங்குள்ள ரசிகர்களுக்கு ஏற்ப ஜெய்ஸ்ரீராம் பாடல் போடப்பட்டது. இது கிரிக்கெட் வல்லுனர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் மதம் சார்ந்த விஷயங்கள் அவ்வளவாக வெளிவராது.
ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்ரீராம் பாடல் ஒளிபரப்பப்பட்டதால் ரசிகர்களும் கோஷங்கள் எழுப்பினர். இதே போல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது ஜெய் ஸ்ரீ ராம் பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.