மும்பை: உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள ஆட்டத்திற்கான சிறப்பு முன்பதிவு டிக்கெட்டுகளின் விற்பனை ஒரு மணி நேரத்தில் காலியானதால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் 4வது முறையாக நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 14 முதல் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. இந்தத் தொடரில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கனவே பிசிசிஐ மற்றும் ஐசிசி-யால் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கவுள்ளது. உலகம் முழுவதும் இருந்து இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்தியா அணி விளையாடும் சில போட்டிகளின் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 25ஆம் தேதியே தொடங்கியது. அன்றைய நாளில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிறப்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. அது தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்தன. புக் மை ஷோ செயலி மூலமாக மாஸ்டர் கார்ட் பயனார்களுக்கான சிறப்பு முன்பதிவு விற்பனையாக அமைந்தது.
இந்த சூழலில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கான சிறப்பு முன்பதிவு தொடங்கியது. இந்த டிக்கெட்டுகளுக்கான முன்பதிவும் புக் மை ஷோ செயலி மூலமாக, மாஸ்டர் கார்ட் வைத்திருப்போர் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிறப்பு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்தும் விற்று தீர்ந்தன.
இதனால் ரசிகர்கள் பலரும் விரக்தியடைந்தனர். புக் மைக் ஷோ செயலி மூலமாக சரியான நேரத்திற்கு புக் செய்து பணம் கட்டியும், முன்பதிவை செய்ய முடியவில்லை என்று பிசிசிஐ நிர்வாகத்தை சாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேரடி டிக்கெட் விற்பனை செப்.3ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.