மும்பை: 16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சலாவில் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கு தேவையான பாதுகாப்பை வழங்க இயலாது என இமாச்சல பிரதேச மாநில முதல்வர் வீரபத்ர சிங் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மத்திய அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும், தரம்சலா ஸ்டேடியம் அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் நினைவிடம் உள்ளதால் சில முன்னாள் ராணுவ வீரர்களும் இந்த போட்டிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெறுமா ? என சந்தேகம் நிலவியது.
இந்த நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டி திட்டமிட்டபடி தரம்சலா மைதானத்தில் நடைபெறும் என்று உலக கோப்பை 20 ஓவர் போட்டி தொடருக்கான இயக்குநர் எம்.வி ஸ்ரீதர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலர் எம்.கே சிங்லா மற்றும் பிற மூத்த அதிகாரிகளை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்.வி ஸ்ரீதர், மத்திய மாநில அரசுகள் இணைந்து அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும். போட்டி திட்டமிட்ட படி வருகிற 19 ஆம் தேதி நடைபெறும் என்றார்.
நேற்று தரம்சலா வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பாகிஸ்தான் குழுவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.