மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இலங்கையில் நடைபெற்றது. இதில் இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி இருக்கிறது.
இலங்கையில் உள்ள காட்டுநாயக்கா மைதானத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் பலப்பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. இதில் இந்திய அணியின் யோகேந்திரா அபாரமாக விளையாடி இங்கிலாந்தின் பந்துவீச்சை சிதறடித்தார். 40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 73 ரன்கள் சேர்த்தார்.இதில் நான்கு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 182 என்ற அளவில் இருந்தது.
இதனை அடுத்து 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலில் தடுமாறியது. அந்த அணி 118 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வெற்றி பெற்றது. இந்திய பந்துவீச்சு தரப்பில் ராதிகா பிரசாத் 3.2 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேபோன்று கேப்டன் விக்ராந்த் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டு களையும் ரவீந்தரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 24 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் விக்ராந்த், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை எங்களது அணி வென்றது மறக்க முடியாதது.
இது என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் பெருமைமிக்க தருணம். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு ஒவ்வொரு வீரர்களும் பங்காற்றி இருக்கிறார்கள். இந்த கோப்பை எங்களுக்கானது மட்டுமல்ல. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசையில் இருக்கும் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளி நபர்களும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசையில் இருக்கும் அனைவருக்குமே இதை நாங்கள் அர்ப்பணிக்கிறோம் என்று கூறியுள்ளார்.