நீயா - நானா மோதல்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர், எதிர்பார்த்ததைவிட சுவாரஸ்யமாக சென்றுக் கொண்டிருக்கிறது. நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், ஏறக்குறை வெற்றிக்கு அருகில் சென்றுவிட்ட இந்திய அணி, கடைசி நாள் கொட்டித் தீர்த்த மழை காரணமாக அந்த நல்வாய்ப்பை இழந்தது. ஆனால், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், அதற்கு சேர்த்து வட்டியும் முதலுமாக வசூலித்துக் கொண்டது விராட் கோலி தலைமையிலான இந்திய படை. 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்று முன்னிலை வகித்தது இந்தியா. உண்மையில் சொல்ல வேண்டுமெனில், 2வது டெஸ்ட் போட்டியில், நான்காவது நாள் வரை இங்கிலாந்து தான் ஆதிக்கம் செலுத்தியது. அவர்கள் பும்ராவை டார்கெட் செய்வதற்கு முன்பு வரை, ஆட்டம் இங்கிலாந்து கண்ட்ரோலில் தான் இருந்தது. அதன் பிறகு தான் அனைத்தும் மாறியது. பும்ரா - ஷமி இணை 9வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்தியா மீண்டு வந்தது. பிறகு, இங்கிலாந்தை 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி வெற்றிப் பெற்றது. இங்கிலாந்து ஊடகங்கள் அந்த அணியை கிழித்து தொங்கவிட அனைத்துக்கும் அமைதியாகவே இருந்தனர் அந்நாட்டு வீரர்கள். இடையில் ஒருவாரம் ஓய்வு கிடைத்ததால், 2 நாட்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டனர்.
கம்பேக் வெற்றி
இதன் பிறகு, ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியை முதல் இன்னிங்ஸில் 78 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து. அந்த இடத்திலேயே போட்டியை இழந்துவிட்டது இந்தியா. அதன் பிறகு எவ்வளவோ போராடியும், இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. முடிவில், இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழலில் தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் (செப்.2) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஷ்வின் என்ட்ரி
இதுகுறித்து நடந்த அணி மீட்டிங்கில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆம்! லண்டன் ஓவல் பிட்ச் சுழற்பந்துவீச்சுக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்திய அணியில் 2 ஸ்பின்னர்கள் இடம்பெறும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது. ஆனால், ஜடேஜாவுக்கு கடந்த போட்டியில் ஃபீல்டிங்கில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. இதனால், முதன் முறையாக அஷ்வின் இத்தொடரில் இடம் பெறுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் என்னவெனில், ஜடேஜாவுக்கு பதிலாக அவர் இடம் பெறவில்லை. இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் தான் அஷ்வின் அணியில் இடம் பிடிப்பார் என்று கூறப்படுகிறது. அதாவது, 3 ஃபாஸ்ட் + 2 ஸ்பின் என்று 3+2 ஃபார்முலாவில் இந்தியா களமிறங்கலாம் என்று தெரிகிறது.
அப்செட்
இந்த டெஸ்ட் தொடரில், பெரியளவில் இம்பேக் ஏற்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார் இஷாந்த் ஷர்மா. ஸோ, அவருக்கு பதிலாகவே அஷ்வினை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும், இஷாந்த் ஷர்மா பக்கமும் சற்று அதிர்ஷ்ட காற்று வீசுவதாகவே தெரிகிறது. ஆம்! ஒருவேளை ஜடேஜா குணமாகவில்லை எனில், இஷாந்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம். அதாவது 4 ஃபாஸ்ட் + 1 ஸ்பின் என்று இந்தியா களமிறங்கலாம். இதுகுறித்த தகவல், அஷ்வினுக்கும், இஷாந்துக்கும் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது. இதில், இஷாந்த் ஏக அப்செட்டாக இருக்கிறாராம். அணி மீட்டிங்கில் சில முக்கிய சீனியர் வீரர்கள் மட்டும் கலந்து கொண்டனர். அதில், இஷாந்தும் ஒருவர். சீனியர் வீரரான இஷாந்த், இங்கிலாந்து ஆடுகளங்களில் இதற்கு முன் மிகச் சிறப்பாக பந்துவீசியவர். இன்னும் சொல்லப்போனால், இங்கிலாந்தில் அவர் வீழ்த்திய விக்கெட்டுகளின், மற்ற பவுலர்களை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த சீசனில் அவரது பவுலிங் சுத்தமாக எடுபடவில்லை என்பதே சிக்கல். இந்த சூழலில், அணியில் அவரது இடம் கேள்விக்குறியாகி இருக்கிறது.