
இரண்டாவது டெஸ்ட்
நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் மழை கொட்டியதால், இந்தியாவின் எளிதான வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆனால், லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், 3வது நாளில் இருந்து இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தினாலும், கடைசி நாளில் "டார்கெட் பும்ரா" மிஷனில் சுக்கு நூறாகிப் போனது இங்கிலாந்து. ஆண்டர்சனை பும்ராவும், கோலியும் வம்பிழுத்ததால், பும்ரா பேட்டிங் செய்ய வந்த போது, அவருக்கு பவுன்ஸ் போட்டு அட்டாக் செய்ய நினைத்த இங்கிலாந்து, போட்டியை கோட்டை விட்டது. பும்ரா - ஷமி கூட்டணி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்களுக்கு புது ரெக்கார்டு படைத்தது. பிறகு 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மெகா வெற்றியையும் பதிவு செய்து தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது.

பிரச்சனையே மிடில் ஆர்டர்
இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸின் ஹெட்டிங்லேவில் நாளை தொடங்குகிறது. இந்தியாவின் ஓப்பனிங் அபாரமாக உள்ளது. லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். உண்மையை சொல்லப் போனால், இவர்கள் இருவரை மட்டும் தான் இந்திய அணி மலை போல் நம்பியுள்ளது பேட்டிங்கில். பிறகு, இந்தியாவின் வேகப்பந்துவீச்சு அணிக்கு அசுர பலம் எனலாம். பவுலிங்கால் தான் இந்திய அணி வெற்றிப் பெற்று வருகிறது. ஆனால், இங்கு பிரச்சனையே மிடில் ஆர்டர் தான். புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் பெரியளவில் சொதப்பி வருகின்றனர்.

11 வீரர்கள்
இந்த சூழலில் தான், இந்திய அணியின் மாதிரி பிளேயிங் லெவன் வெளியாகி உள்ளது. இதில், ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா / அஷ்வின், முகமது சிராஜ், முகமது ஷமி, பும்ரா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யகுமார் யாதவ்
ஓப்பனிங்கில் எந்த மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை என்பதால், ரோஹித் - ராகுல் இன்க்ளூஷனில் எந்த ஆச்சர்யமும் இல்லை. மிடில் ஆர்டரில் தான் முக்கிய மாற்றமாக புஜாரா நீக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அப்படி சேர்க்க்கப்படும் பட்சத்தில், அது இந்தியா எடுக்கும் மிக முக்கியமான முடிவாக அமையும். இளம் வீரரான சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் புஜாராவின் மோசமான பேட்டிங் ஃபார்ம் தான்.

மீண்டும் ரஹானே
கேப்டன் விராட் கோலி. பேட்டிங்கில் இவரது தடுமாற்றம் அணிக்கு பெரிய மைனஸ். 40 ரன்கள் இவர் அடிப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. அப்படியே 50 ரன்கள் அடித்தாலும், அவரால் சதம் அடிக்க முடியவில்லை. அவர் சதம் அடித்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதே உண்மை. பிறகு ரஹானே. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் 61 ரன்கள் அடித்து ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தார். அணியின் துணை கேப்டன் இவர் தான். ஸோ, மீண்டும் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. லோ ஆர்டரில் ரிஷப் பண்ட் தொடர்ந்து நம்பிக்கை அளிக்கிறார். இவரது அதிரடி பேட்டிங் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. விக்கெட் கீப்பிங்கிலும் வெகு தூரம் பயணித்திருக்கிறார்.

ஜடேஜா நீக்கம்?
லோ ஆர்டரில் ஜடேஜாவுக்கு பதில், அஷ்வின் சேர்க்கப்படும் வாய்ப்பும் இருக்கிறது. ஆம்! ஜடேஜா சிறப்பாக பேட்ட்டிங் செய்தாலும், பவுலிங்கில் அவரால் ஒரு விக்கெட் கூட இரண்டு போட்டியிலும் கைப்பற்ற முடியவில்லை. இதனால், ஜடேஜாவுக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் எனலாம். ஏற்கனேவே, 'ஏன் அஷ்வினை முதல் இரு மேட்சிலும் சேர்க்கவில்லை என்று ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மூன்றாவது போட்டியிலும் அவரை சேர்க்கவில்லை எனில், கேப்டன் விராட் கோலிக்கு அது Backfire-ஆக அமையலாம்.

மீண்டும் ஷர்துள்
பிறகு பவுலிங்கில் ஷமி, பும்ரா, சிராஜ் கூட்டணி அசைக்க முடியாத மெகா கூட்டணியாக உருவெடுத்துள்ளது. இதில் நான்காவது பவுலராக மீண்டும் ஷர்துள் தாகூருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்துள் சிறப்பாகவே பந்து வீசினார். பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின. ஆனால், காயம் காரணமாக அவர் 2வது டெஸ்ட்டில் பங்கேற்க முடியவில்லை. இஷாந்த் ஷர்மாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இஷாந்தின் பவுலிங்கையும் குறை சொல்ல முடியாது. விக்கெட்டுகள் அதிகம் எடுக்கவில்லை என்றாலும், நன்றாகவே வீசினார். எனினும், இளம் வீரர் தாகூருக்கே வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது. எது எப்படியோ! இந்தியா மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். குறிப்பாக, இங்கிலாந்து பேட்டிங் இம்முறை வலுவிழந்து உள்ளது. ஜோ, ரூட் தவிர மற்றவர்கள் அனைவரையும் வருவதும் போவதுமாக இருப்பதால், இந்திய பவுலர்களுக்கு அது கூடுதல் வசதியாகிப் போனது. அதனைப் பயன்படுத்தி, இந்த டெஸ்ட் தொடரை அட்லீஸ்ட் 2-0 என்ற கணக்கில் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.


Click it and Unblock the Notifications