டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அதில் அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த வேண்டும் என்று ஆஸ்திரேலியா வலியுறுத்துகிறது. ஆனால் இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்கிறது. அங்கு மூன்று டி-20 போட்டிகள், நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருதினப் போட்டித் தொடரில் விளையாட உள்ளது. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 21, 23, 25ல் மூன்று டி-20 போட்டிகள் நடக்கின்றன. டிசம்பர் 6, 14, 26, அடுத்தாண்டு ஜனவரி 3ல் என் நான்கு டெஸ்ட் போட்டிகள் துவங்க உள்ளன. அதைத் தவிர அடுத்தாண்டு ஜனவரி 12, 15, 18ல் மூன்று ஒருதினப் போட்டிகள் நடக்க உள்ளன.
இதில் அடிலெய்டு ஓவலில் டிச. 6ல் துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறி வருகிறது. ஆனால், இதற்கு இந்திய அணி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேப்டன் விராட் கோஹ்லி உள்ளிட்டோரிடம் கோச் ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அவர்கள் இதற்கு தயாராக இல்லை என்பதை நிர்வாகத்திடம் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு இந்தியா மறுப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதல் காரணம், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வெல்ல முடியும் என்று இந்திய அணி நம்புகிறது.
பகலிரவு ஆட்டமாக நடந்தால், பிங்க் பாலில் விளையாட வேண்டும். இந்திய வீரர்களுக்கு அதில் அனுபவம் இல்லை. மேலும் பிங்க் பால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாகும். ஆஸ்திரேலியா வேகப்பந்தில் வலுவாக உள்ளதால், அது அந்த அணிக்கே சாதகமாக அமைந்துவிடும்.
அடிலெய்டில் ஆஸ்திரேலியா இதுவரை நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக மூன்று பகலிரவு டெஸ்டில் விளையாடியுள்ளது. அனைத்திலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது.
அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளதால், எவ்வித புதிய பரிசோதனைக்கும் இந்திய அணி தயாராக இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.