
அதே அணி
இந்நிலையில், இன்று ஹெட்டிங்லேவில் 3வது டெஸ்ட் மேட்ச் தொடங்கியது. முதல் 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மோசமாக செயல்பட்டதால், இப்போட்டியில் புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் யாதவ் அல்லது மாயங்க் அகர்வால் அணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாத ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்பட்டது. ஒருவேளை இரண்டு ஸ்பின்னர்களுடன் களமிறங்க முடிவு செய்தால், இஷாந்த் ஷர்மாவுக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாகூர், காயம் காரணமாக 2வது டெஸ்ட்டில் விளையாடவில்லை. இந்நிலையில், 3வது போட்டியில் அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

ஏன் அஷ்வின் இல்லை?
ஆனால், இன்று டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஒரேவார்த்தையில் "நோ சேஞ்சஸ்" என்று சொல்லிவிட்டார். இதுகுறித்து அவர் டாஸ் வென்ற பிறகு பேசுகையில், "அஷ்வினை அணியில் கொண்டு வரலாம் என்று தான் நினைத்தோம். ஆனால், அதிகம் புற்கள் இல்லாத இந்த பிட்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், அது அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்துவிடும். இந்த சூழல் ஜடேஜாவுக்கு நன்றாக பொருந்தும். ஆகையால், அவர் நிச்சயம் அதிக ஓவர்களை வீசுவார். எனது பேட்டிங்கை இன்னும் மேம்படுத்தி, அணிக்குள் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பேன். நான் எனது செயல்முறையை நம்புகிறேன், சில நேரங்களில் அது களத்தில் சரியாக செயல்படாமல் போய்விடும், ஆனால் அணியின் செயல்திறனில் நான் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறேன் என்பதில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். அக்கறையாகவும் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தொடங்கிய போட்டி
சரியாக விளையாடாததால் புஜாராவுக்கு பதில் சூர்யகுமார் சேர்க்கப்படலாம் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், புஜாராவுக்கு ஆதரவாக நின்றிருக்கிறார் கேப்டன் கோலி. அதேபோல், ரஹானே இடத்துக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை. இந்நிலையில், இன்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். முதல் ஓவரை ஆண்டர்சன் வீசினார்.

புஜாரா அவுட்
ஆனால், எதிர்பாராதவிதமாக லார்ட்ஸ் டெஸ்ட்டில் சதம் விளாசிய லோகேஷ் ராகுல், முதல் ஓவரிலேயே ஆண்டர்சன் ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் கேட்ச் ஆகி வெளியேறினார். இதனால், புஜாரா 2வது ஓவரிலேயே களமிறங்கினார். ஆனால், ஒன் டவுன் இறங்கி 9 பந்துகளை சந்தித்த புஜாரா, ஒரேயொரு ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் அவுட் ஸ்விங்கில் புஜாரா கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஹெட்டிங்லே வேகப்பந்து வீச்சளர்களின் சொர்க்கபுரி என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. இந்திய அணி 4 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடி வருகிறது. இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பண்ட் (w), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.


Click it and Unblock the Notifications











