அவங்கதான் அடிக்கிறாங்கன்னு தெரியுதுல்ல.. அப்புறமும் ஏன் 'ஷார்ட் பிட்ச்' போடுறீங்க: சீறும் கவாஸ்கர்
சிட்னி: உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது.
ஆஸ்திரேலிய அணி 371 ரன் குவித்தது. இந்தியா 265 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். இதேபோல் பேட்டிங்கும் சரியில்லை. இதனால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்திய அணி மீது முன்னாள் கேப்டனும், டி.வி. வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் கடுமையாக பாய்ந்து உள்ளார். கவாஸ்கர் கூறியதாவது:
இந்திய பந்துவீச்சில் முன்னேற்றம் இல்லை. நிறைய ஷாட்பிட்ச் பந்துகளை வீசினர். இதுபோன்ற பந்துகளை ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதில் அடிக்க பழகியவர்கள். ஆனால் இந்திய பவுலர்கள் 'யார்க்கர்' வீசவில்லை. சுழற்பந்து வீச்சும் சாதாரணமாகவே இருந்தது. பந்து பவுன்சர் ஆகும் ஆஸ்திரேலிய களங்களை பார்த்ததும், பவுலர்கள் தங்களை மறந்து ஷாட் பிட்ச் பந்துகளையே அதிகம் வீசுகின்றனர். ஆனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது பற்றி சிந்திக்க வேண்டியது பவுலர்களுக்கு அவசியம்.
இந்திய பந்து வீச்சாளர்களிடம் சுத்தமாக நம்பிக்கையே இல்லை என்றே நினைக்கிறேன். ஆனால் அதை அவர்களால் மாற்ற முடியும். அதற்காக நேரம் இன்னும் இருக்கிறது. இது பயிற்சி ஆட்டம்தான். உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications