
நீட் அண்ட் பெர்ஃபெக்ஷன்
ஒருநாள், டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சும்மா தொட்டுவிட்டால் பந்து சிக்ஸர்களுக்கு பறந்து போய் விழும். ஸ்டேடியத்தில் கூரையை அவ்வப்போது பந்துகள் கிராஸ் பண்ணும். நமது ஹிட்டர்ஸ்களும் அனாயசமாக விளாசிக் கொண்டிருப்பார்கள். ஆனால், இந்த களமே வேறு. இது டெஸ்ட் கிரிக்கெட். அதுவும், இங்கிலாந்து பிட்சில். இங்கு கிரீஸில் நின்று கபடியும் ஆட முடியாது.. குட்டிக்கரணமும் அடிக்க முடியாது. "நீட் அண்ட் பெர்ஃபெக்ஷன்" இலையெனில், இங்கிலாந்தின் ஈரப்பசை நிறைந்த காற்றோடு கரைந்து போக வேண்டியது தான்.

இங்கிலாந்துக்கே அதிகம்
இப்படிப்பட்ட கடினமான சூழலில் தான் கோலியின் டீம் இங்கு விளையாட காத்திருக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகளில் எத்தனை ஜெயிப்பார்கள், எத்தனை தோற்பார்கள் என்று எதுவும் கூற முடியாது. ஆனால், இந்திய அணி வீரர்களின் நீண்ட கால ஓய்வு, இந்திய அணியுடன் விளையாடுவதற்கு முன்பு இங்கிலாந்து அடுத்தடுத்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் விளையாடும் நிலைமைகளை கருத்தில் கொண்டு பார்த்தால், பலரது கணிப்பும், இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதே.

டெஸ்ட் தொடர் வெற்றி
சரி.. அதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முதன் முறை இங்கிலாந்தில், நமது இந்திய அணி எப்போது டெஸ்ட் தொடரை வென்றது தெரியுமா? இதை தெரிந்து கொள்ள நாம் 1971ம் ஆண்டுக்கு செல்ல வேண்டியிருக்கும். சுதந்திரம் அடைந்து 24 ஆண்டுகள். 'இந்திய கிரிக்கெட்டின் கடவுள்" சச்சின் அப்போது பிறக்கவே இல்லை. ஏன்.. இன்று பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலியும் அன்று பிறக்கவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கு அப்போது 8 வயது.

யாருமே எதிர்பார்க்கவில்லை
ஆம்! அஜித் வடேகர் தலைமையிலான இந்திய அணி, 1971ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மொத்தம் 3 டெஸ்ட் போட்டிகள். இங்கிலாந்து அணியின் கேப்டன் ரேமண்ட். லார்ட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் மற்றும் ஓல்ட் டிராஃபோர்ட்டில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்தது. இவ்விரு போட்டிகளையும் இந்திய அணி டிரா செய்தது கூட யாருமே எதிர்பார்க்காத ஒன்று. ஏன்.. இந்திய அணியே அதை எதிர்பார்க்கவில்லை.

சுனில் கவாஸ்கர்
திலீப் சர்தேசாய், ஸ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன், குண்டப்பா விஸ்வநாத், பிஷன் சிங் பேடி, 'இளம் வீரர்' சுனில் கவாஸ்கர் என்று களமிறங்கிய இந்திய அணி, முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில், டிரா செய்தது உண்மையில் ஷாக் தான். ஆனால், அந்த இரண்டு டிராவும், இந்திய அணி கோப்பையை வெல்வதற்கான ஒரு நம்பிக்கை கீற்றை வீரர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அடங்கிய இங்கிலாந்து
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் எடுக்க, இந்தியா முதல் இன்னிங்ஸில் அதை விட குறைவாக 284 ரன்களே எடுத்தது. ஆனால், இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய பவுலர் 'Bhagwath Subramanya Chandrasekhar'-ன் அட்டகாசமான பவுலிங்கில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது இங்கிலாந்து. என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் ஆறு விக்கெட்டுகளை அறுவடை செய்ய, 101 ரன்களில் அடங்கியது இங்கிலாந்து.

வரலாறு படைத்த இந்தியா
இந்தியாவே எதிர்பார்க்காத அபார வாய்ப்பு. பல ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டனை அதன் மண்ணிலேயே வைத்து வீழ்த்த கிடைத்த மெகா வாய்ப்பு. கெட்டியாக பிடித்துக் கொண்டது இந்தியா. 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது. இங்கிலாந்தில் முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி. அதுமட்டுமின்றி, அதற்கு முன்பு வரை தொடர்ந்து 26 டெஸ்ட் போட்டிகளில் வென்ற இங்கிலாந்தின் வெற்றிநடைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய அணி.


Click it and Unblock the Notifications