மும்பை: அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பிசிசிஐ தரப்பில் அட்டவணை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி பாகிஸ்தான் செல்கிறதா என்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படாத பட்சத்தில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மார்ச் 1ஆம் தேதி லாகூர் மைதானத்தில் நடத்த பிசிசிஐ தரப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடக்கவுள்ளது. கடைசியாக 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது. இந்த நிலையில் பாகிஸ்தானில் நடக்கும் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

சொந்த மண்ணில் நடப்பதால், பாகிஸ்தான் அணி கட்டாயம் விளையாடும். அதேபோல் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் தவிர்த்து டாப் 7 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன. இது பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேபோல் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே பாகிஸ்தானில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐசிசி பாதுகாப்பு குழு ஆய்வு செய்துள்ளது. இருந்தாலும் அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் 2008ஆம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தரப்பில் ஏற்கனவே ஐசிசி நிர்வாகத்திடம் அட்டவணைக்கான பரிந்துரை பட்டியல் அளிக்கப்பட்டது.
அதில் மார்ச் 1ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டியை லாகூர் மைதானத்தில் நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு பிசிசிஐ தரப்பில் இதுவரை எந்த சம்மதமும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதன்படி பிப்.20ஆம் தேதி இந்தியா - வங்கதேசம் போட்டியும், பிப்.23ஆம் தேதி இந்தியா - நியூசிலாந்து போட்டியும், மார்ச் 1ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டியும் நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் லாகூர் மைதானத்திலேயே நடத்த பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பாகிஸ்தான் தரப்பில் அளிக்கப்பட்ட அட்டவணையிலும் இந்திய அணி போட்டிகள் லாகூரிலேயே திட்டமிடப்பட்டிருந்தன. இதனால் 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நிச்சயம் பாகிஸ்தான் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றமாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.