இன்னொரு டோணி "ரெடி".. ஜூனியர் உலக கோப்பையில் இந்திய விக்கெட் கீப்பர் சாதனை
டாக்கா: ஜூனியர் உலக கோப்பை எனப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்தில் அரை சதம் கடந்து இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில், மிர்பூர் நகர ஸ்டேடியத்தில், நேபாளத்தை எதிர்கொண்டது இந்தியா. பனி மூட்டத்தால் ஆட்டம் 48 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இந்திய பந்து வீச்சை நொறுக்க முடியாத நேபாளத்தால், 48 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 169 ரன்கள்தான் எடுக்க முடிந்தது.
இதையடுத்து இந்திய ஓப்பனர்களாக ரிஷப் பந்த் மற்றும் இஷான் கிஷான் களமிறங்கினர். இதில் இஷான் நிதானமாக ஆடிய நிலையில், ரிஷப் ஆட்டத்தில் அனல் பறந்தது.
இதனால் 18.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 175 ரன்கள் விளாசி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.
ரிஷப் பந்த் 24 பந்துகளில் 78 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதில் 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், 18 பந்துகளில் அரை சதம் கடந்து, ஜூனியர் உலக கோப்பையில், அதிவிரைவாக அரை சதம் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
முன்னதாக, 2009-10ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையின்போது, வெஸ்ட் இண்டீசின் டிரிவோன் கிரிபித் 19 பந்துகளில் அரை சதம் கடந்ததுதான் சாதனையாக இருந்தது. இந்திய அளவில், ஜூனியர் உலக கோப்பை போட்டிகளில் ரெய்னா மற்றும் யுவராஜ்சிங் ஆகியோர் குறைந்த பந்துகளில் அரை சதம் கடந்திருந்தனர்.
இந்திய அணி கேப்டன் டோணி இன்னும் சில வருடங்களில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதால், அதற்கு சிறந்த மாற்றாக விக்கெட் கீப்பர் அதிரடி வீரரான ரிஷப் பந்த் விளங்குவார் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.


Click it and Unblock the Notifications