மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் 2ந் தேதி தென்னாப்பிரிக்கா செல்கிறது.. அங்கு 3 ஒரு நாள் போட்டிகள், 2 டெஸ்ட், போட்டிகளில் விளையாடுகிறது.
இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் டிசம்பர் 5-ந் முதல் ஒரு நாள் போட்டி ஜோஹன்ஸ்பர்க்கில் நடைபெற உள்ள என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டர்பனில் டிச.8-ந் தேதி 2வது ஒரு நாள் போட்டியும், செஞ்சூரியனில் வரும் டிச.11ந் தேதி 3வது ஒரு நாள் போட்டியும் நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்கா லெவன் அணியுடன் டிசம்பர் 14-15இல் பயிற்சி ஆட்டம் ஆடும் இந்தியா அதன்பின் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் டிசம்பர் 18-22 ல் ஜோகன்ஸ்பர்க்கிலும், 2வது டெஸ்ட் டிச.26-30-ல் டர்பனிலும் நடைபெற உள்ளது.
முன்னதாக தென்னாப்பிரிக்கா தன்னிச்சையாக இந்திய அணியின் சுற்றுப் பயண அறிவிப்பை வெளியிட்டதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தியை தெரிவித்திருந்தது. இதனையடுத்து போட்டிகளின் எண்ணிக்கையை இந்தியா குறைத்துக் கொண்டது. இந்த அறிவிப்பை இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இணைந்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.