இந்திய ரசிகர்களுக்கு விருந்து ரெடி.. இங்கிலாந்து டெஸ்டுக்கு முன்னதாக ஒரு போட்டி... அட்டவணை வெளியானது!
லண்டன்: இந்திய அணி வீரருக்கு கொரோனா உறுதியாகியுள்ள சூழலில், அதனை பெரிதுபடுத்தாமல் அடுத்த கட்ட நடவடிக்கையில் குதித்துள்ளது பிசிசிஐ.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பயிற்சி ஆட்டம்
முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல் தர பயிற்சி போட்டியில் விளையாடாததே இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனவே இங்கிலாந்து டெஸ்ட் தொடர்க்கு முன்னதாக அந்நாட்டின் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

போட்டி விவரங்கள்
இந்நிலையில் அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கவுண்டி அணிக்கும் இந்திய அணிக்கும் இடையேயான இந்த போட்டி வரும் ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. மொத்தம் 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் துர்ஹாம் நகரத்தில் உள்ள எமிரெட்ஸ் ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது.

பயோ பபுள்
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை முடித்த இந்திய வீரர்கள், குடும்பத்தினருடன் சிறிது நாட்கள் ஜாலியாக இங்கிலாந்தை வலம் வந்துக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தற்போது கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு துர்ஹாம் நகரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் பபுளில் இணைந்த பிறகு அடுத்தகட்ட ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

ரிஷப் பண்ட்
இதனிடையே இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட்-க்கு டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்ட பின்னர் ரிஷப் பண்ட்-க்கு உறுதியாகியுள்ளது. எனவே கவுண்டி அணியுடனான பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட்-க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மீதம் உள்ள இந்திய வீரர்கள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பபுள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications