
புதிய சாதனை படைத்த வங்கதேசம்
அடுத்தடுத்து 2 தோல்விகளைச் சந்தித்த இந்தியா, தொடரையும் இழந்தது. இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக தொடர் வெற்றியைப் பதிவு செய்து வங்கேதசம் சாதனை படைத்துள்ளது.

அதிர்ச்சித் தோல்வி
3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா. நம்மை விட பல மடங்கு கீழ் நிலையில் உள்ள வங்கதேசத்திடம் இப்படி அடி மேல் அடி வாங்கிய இந்திய அணியைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பொறுமிக் கொண்டுள்ளனர்.

அடுத்தடுத்து பதிலடி
உலகக் கோப்பைத் தொடரின்போது இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு ஒருமுறை அல்ல, 2 முறை பதிலடி கொடுத்துள்ளது வங்கதேசம் என்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்று மிர்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

வில்லனாக வந்த ரஹ்மான்
மிகச் சிறப்பாக பந்து வீசிய வங்கதேச இளம் வேகப் பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 43 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களைச் சாய்த்தார். தனது முதல் போட்டியிலும் இவர்தான் இந்தியாவுக்கு பெரிய "நைட்மேர்" ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழுங்காகவே ஆடவில்லை
இந்திய வீரர்கள் யாருமே நல்லதொரு பார்ட்னர்ஷிப்புக்காக ஆடியது போலவே தெரியவில்லை. என்னவோ போல இருந்தது அவர்களின் ஆட்டம். கோ ஆர்டினேஷன் சரியாக இல்லை. முன்னணி வீரர்கள் தொடர்ந்து சொதப்பினர்.

விராத் கோஹ்லிக்கு என்ன ஆச்சு
இந்த விராத் கோஹ்லிக்கு என்ன கொள்ளை என்றே தெரியவில்லை. இவர் ஒழுங்காக விளையாடி பல காலம் ஆகி விட்டது. ஆனாலும் பலகாரம் கொடுத்து உபசரித்தபடி தான் இருக்கிறது இந்திய அணி நிர்வாகம். அதிரடியாக இவரை ஒரு தொடரிலிருந்து நீக்க வைத்து பனிஷ்மென்ட் கொடுத்தால்தான் உருப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் தாங்கு தாங்கென்று இவரைத் தாங்கி வருகிறார்கள்.

இப்படி சொதப்பினால் எப்படி
முதல் போட்டியிலும் இவர் சரியாக ஆடவில்லை. 2வது போட்டியிலும் ஆடவில்லை. வங்கதேசத்திடம் கூட ஆட முடியாமல் நமது வீரர்கள் தத்தளிப்பதை நியாயமான செயலாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

டார் டார் என கிழிக்கும் வங்கதேசம்
வங்கதேசம் சமீபத்தில்தான் பாகிஸ்தான் அணியை 3-0 என்ற கணக்கில் தோற்கடித்து தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது. தற்போது இந்தியாவை அது வீழ்த்தித் தொடரை வென்றுள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் என்னவோ புரிகிறது.. ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

பொறுப்பான ஆட்டம்
நேற்றைய 201 ரன்கள் என்ற வெற்றி இலக்கை வங்கதேச வீரர்கள் அவ்வளவு ஜாலியாக எட்டி சாதனை படைத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடினர். இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப்பைக் கொடுக்கவில்லை என்ற போதிலும் பின்னால் வந்தவர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆடி வெற்றிக்குக் கொண்டு சென்றனர் அணியை.

திட்டமிட்ட சேஸிங்
செளம்யா சர்க்கார் 34, லிட்டன் தாஸ் 36, ரஹீம் 31, அதை விட மேலாக ஷாகிப் அல் ஹசன் 51 என்று பிரமாதமாக ஆடினர். இந்திய பந்து வீச்சை கேலிக்கூத்தாக்கி விட்டது வங்கதேச வீரர்களின் திட்டமிட்ட பேட்டிங்.

பூப்பந்தா வீசுறீங்க
இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் சரி, வேகப் பந்து வீச்சாளர்களும் சரி கொஞ்சம் கூட அதிர்ச்சி தராத வகையில் பூப்பந்து போல பந்து வீசினால் பின்னர் வங்கதேச வீரர்கள் அடிக்காமல் விட்டு வைப்பார்களா என்ன.
உண்மையில் வங்கதேசத்துக்கு இது மிகச் சிறந்த வெற்றி என்பதைப் போல, இந்தியாவுக்கு மிக மோசமான தோல்வி என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications