மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பல்வேறு அணிகளும் இந்தியாவில் ஒரு நாள் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு முன் இந்தியா விளையாடும் போட்டிகள் குறித்து பிசிசிஐ உயர்மட்ட குழுவில் விவாதிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு இந்திய மாதங்களில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலககோப்பை போட்டியை சேர்த்து 9 முறை மோத இருக்கின்றன.தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடும் இந்திய அணி அங்கிருந்து அயர்லாந்து சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடும். அதன் பிறகு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த தொடர் முடிந்தவுடன் இந்தியாவுக்கு மூன்று முக்கிய அணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அந்த வகையில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. அவர்கள் இந்தியாவுடன் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கின்றனர். இதேபோன்று தென்னாப்பிரிக்கா அணியும் இந்தியா வந்து மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.இதில் தென்னாப்பிரிக்கா போட்டிகளை எப்படி நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது.
உலக கோப்பைத் தொடர் முடிந்தவுடன் டிசம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா உடன் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதேபோன்று கடந்த ஜூன் மாதம் நடைபெற இருந்த ஆப்கானிஸ்தான் எதிரான தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிகளுடன் உலகக் கோப்பை தொடருக்கும் முன்பு இந்திய அணி எதிர்கொண்டால் அது நல்ல பயிற்சியாக அமையும். இதனால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.