நல்ல தொடக்கம்
சிங்கிள்ஸ், பவுண்டரி என ரன்களை ராகுல் மற்றும் தவானும் அடித்து வந்தனர். குறிப்பாக ஷிகர் தவான் 29 ரன்களில் 5 பவுண்டரிகளை விளாசினார். இதனையடுத்து பெரிய ஷாட் ஆட முயன்ற தவான் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது.
கோலி டக் அவுட்
இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். ஆனால் அவர் டக் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இதனையடுத்து, அணியை மீட்கும் முயற்சியில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் ஈடுபட்டனர். தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஸ்டம்புகளை குறிவைத்து வீசி இந்திய வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர். தென்னாப்பிரிக்காவின் நெருக்கடியை உடைக்கும் விதமாக ரிஷப் பண்ட் பளார் என சிக்சர் அறைந்தார்.
ரிஷப் அதிரடி
கே.எல்.ராகுலும் தன் பங்கிற்கு பவுண்டரிகள் விளாச, இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மீது சேர்த்தது. ரிஷப் பண்ட் 10 பவுண்டரிகள், 2சிக்சர்கள் விளாசி 85 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கே.எல், ராகுல் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அணிக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டது. இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் 11 ரன்களில் வெளியேறினார்.இதனால் இந்தியாவின் ரன் குவிக்கும் வேகம் குறைந்தது.
சொதப்பிய நடுவரிசை
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரும் 22 ரன்கள் மட்டும் அடித்து வெளியேறினார். இறுதியில் ஷர்துல் தாக்கூர், அஸ்வின் ஜோடி தங்கள் பங்கிற்கு கடுமையாக முயற்சித்து ரன்கள் சேர்க்க, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 287 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 300 ரன்களுக்கு மேல் இந்தியாவின் ஸ்கோர் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,நடுவரிசை வீரர்கள் சொதப்பியதால் இலக்கு குறைந்தது. ஷர்துல் தாக்கூர் 40 ரன்களும், அஸ்வின் 25 ரன்களும் எடுத்தனர்.