இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற 400 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் - சுப்மன் கில் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

இதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில் இணை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கியது. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரி விளாசிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் விளாசினர். ஸ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளில் அரைசதம் கடக்க, சுப்மன் கில் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து இருவரின் அதிரடியும் உச்சத்திற்கு சென்றது.
அதுவரை பவுண்டரிகளை விளாசிய இருவரும் அதன்பின் சிக்சர்களை விளாசினர். இதன் காரணமாக இந்திய அணியின் ஸ்கோர் 29 ஓவர்களிலேயே 200 ரன்களை கடந்தது. சிறப்பாக் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 86 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இதன்பின் அனைத்து பந்துகளிலும் பவுண்டரி அடிக்க முயன்றி 90 பந்துகளில் 105 ரன்கள் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 92 பந்துகளில் சதம் அடிக்க, ரசிகர்கள் கரகோஷம் விண்ணை தொட்டது. ஆனால் அவரும் 104 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் - இஷான் கிஷன் கூட்டணி சேர்ந்து அதிரடியை தொடர்ந்தது. கேஎல் ராகுல் இரண்டாவது பந்திலேயே மைதானத்தில் வெளியில் சிக்சர் அடித்து பிரமிக்க வைத்தார். இஷான் கிஷன் தன் பங்கிற்கு ஆடம் ஸாம்பாவை ஸ்ட்ரெய்ட் திசையில் பவுண்டரிகளாக விளாசினார். இதனால் 41வது ஓவரிலேயே இந்திய அணி 300 ரன்களை கடந்தது.

பின்னர் இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சரியான நேரத்தில் களம் புகுந்தார் சூர்யகுமார் யாதவ். கேமரூன் க்ரீன் வீசிய 44வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை பறக்கவிட, அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்க்கப்பட்டது. இன்னொரு முனையில் கேஎல் ராகுல் 35 பந்துகளில் அரைசதம் அடித்து, 52 ரன்களில் வெளியேறினார். 46 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 355 ரன்கள் எடுத்திருந்தது.
சூர்யகுமார் யாதவின் அதிரடியை யாராலும் கட்டுப்படுத்த முடியாமல் திணற, அவரோ 24 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன் மூலமாக 49 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 389 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் கடைசி ஓவரில் 400 ரன்களை கடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த ஓவரில் 10 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய விளாசிய அதிகபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.