நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 154 ரன்கள் என்ற இலக்கை பத்தாவது ஓவரிலேயே எட்டி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது.
இதன் மூலம் தொடர்ந்து இந்திய அணி 11வது முறையாக டி20 தொடரை வென்று சாதித்து இருக்கிறது. பத்தாவது முறையாக தொடர்ந்து டி20 தொடரில் இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. டாஸ் வென்ற கேப்டன் சூரியகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் அபார பந்துவீச்சால் நியூசிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியின் நடுவரிசையில் கிலன் பிலிப்ஸ் 40 பந்துகளில் 48 ரன்களும்,மார்க் சாப்மேன் 23 பந்துகளில் 32 ரன்கள் அடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதன் காரணமாக நியூசிலாந்து அணி ஒன்பது விக்கெட் இழந்து 153 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா மூன்று விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா ரவி பிஷ்ணாய் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. சஞ்சு சாம்சன் ஆட்டத்தின் முதல் பந்திலே கோல்டண் டக்காகி ஆட்டம் இழந்தார்.
இதனை அடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இசான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி அடித்த இஷான் கிஷன் 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா, சூரியகுமார் ஆகியோர் பட்டையை கிளப்பினர்.
இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை மைதானத்தில் நான்கு பக்கமும் சிதறடித்தனர். சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மார் 20 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும், ஏழு பவுண்டரிகளும் அடங்கும். இதேபோன்று சூரிய குமார் யாதவ் ஆறு பவுண்டரி, மூன்று சிக்ஸர்களுடன் 26 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்றனர்.
இதன் காரணமாக 154 ரன்கள் என்று இலக்கை வெறும் 10 ஓவரிலேயே இந்திய அணி எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மூன்றுக்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. சர்வதேச t20 போட்டி வரலாற்றில் 25 பந்துகளுக்கு கீழ் அதிக முறை அரைசதம் அடித்த வீரர்கள் என்று பெருமையை சூரியகுமார் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் பெற்றுள்ளனர்.