WTC Final குறித்து இந்திய டெஸ்ட் அணி மறந்து விட வேண்டும்.. முன்னாள் வீரர் பரபர கருத்து
மும்பை: இந்திய டெஸ்ட் அணி தற்போது மாற்றக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கின்ற போதிலும், அணியின் முன்னேற்றம் நிலையானதாக இருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது குறித்து யோசிப்பதை விடுத்து, திறனை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
2025ஆம் ஆண்டின் இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதி பெறும் வாய்ப்பு மிகவும் கடினமாகியுள்ளது.

2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் இரண்டாவது பாதியில் இந்திய அணிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. முதலில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான வெளிநாட்டுத் தொடர்களில் விளையாடும் இந்தியா, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட உள்நாட்டுத் தொடரை நடத்தவுள்ளது.
தற்போது 48.15 சதவீத புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா, முதல் இரண்டு இடங்களுக்குள் முன்னேற அடுத்தடுத்து பல வெற்றிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய தீப் தாஸ்குப்தா , "அணியில் இன்னும் பல மேம்பாடுகளை நான் பார்க்க விரும்புகிறேன். நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும், நாம் முன்னேறி வருகிறோமா?"
"ஆமாம், அணியில் அனுபவமின்மை உள்ளது, இது ஒரு மாற்றக் கட்டம் தான். ஆனால், தொடர்ச்சியான முன்னேற்றத்தைக் காண்பது மிகவும் முக்கியம். உண்மையில், பலருக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தை நான் சொல்லப் போகிறேன். தற்போதைக்கு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவது பற்றி நாம் மறந்துவிடுவது நல்லது" என்று கூறினார்.
"அதைப்பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. என் கருத்துப்படி, 2020-21 காலகட்டத்தில் இருந்ததைப் போல இந்திய டெஸ்ட் அணியை எப்படி மீண்டும் வலுவானதாக உருவாக்குவது என்பதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். தகுந்த திட்டமிடலுடன் கூடிய அந்த காலகட்டத்தில் தான் இந்திய அணி வெளிநாடுகளிலும் வென்றது, உள்நாட்டிலும் தொடர்களைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது" என்று தாஸ்குப்தா தெரிவித்தார்.
"உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தால், குறுக்கு வழிகளைத் தேட நேரிடலாம். குறிப்பிட்ட அந்தப் போட்டி அல்லது தொடரை வெல்வதற்கான தற்காலிக வழிகளை மட்டுமே நீங்கள் தேடுவீர்கள். அது முக்கியம் தான், என்னை தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம், ஆனால் நீண்ட கால பலன்களை நோக்கிய மற்றொரு கோணத்திலும் நாம் இதைப் பார்க்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications

