ஞாயிற்றுக்கிழமை இங்க மழை பெய்யக் கூடாது.. ஓவல்ல பெய்யனும்.. அப்பத்தான் இந்தியாவுக்கு நல்லதாம்!
லண்டன்: இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டி, இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிதான் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இந்திய ரசிகர்கள் பதைபதைப்புடன் காத்துள்ளனர்.
தற்போதைய நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மீதமுள்ள போட்டிகள் அனைத்துமே அனைத்து அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டியாக மாறியுள்ளன. ஜெயித்தால் அடுத்த சுற்று, தோற்றால் வீட்டுக்கு நடையைக் கட்டு என்ற நிலையில் அணிகள் உள்ளன.
தற்போது உள்ள அணிகளில் இங்கிலாந்து மட்டும்தான் அரை இறுதிக்கு தனது வாய்ப்பை உறுதி செய்துள்ளது. மற்ற அணிகள் அனைத்தும் போராடிக் கொண்டுள்ளன. இந்தக் குழப்பத்திற்குக் காரணம் இங்கிலாந்தில் பெய்து வரும் மழைதான்.

நடப்புச் சாம்பியனுக்கே போராட்டமப்பா
நடப்புச் சாம்பியன் இந்தியாவே இந்தத் தொடரில் தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தானை சூப்பராக ஜெயித்த இந்தியா அடுத்த போட்டியில் இலங்கையிடம் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது. காரணம் பவுலிங் மெத்தனம்.

ஆஸ்திரேலியா சோகம்
மறுபக்கம் மழை காரணமாக ஆஸ்திரேலியா கடுமையாக பாதிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவும் அதேதான். இவர்களும் ஜெயித்தால்தான் அடுத்த சுற்று என்ற நிலையில உளளனர்.

ஆஸ்திரேலியா ஜெயித்தாக வேண்டும்
இன்று எட்பாஸ்டனில் இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் சந்திக்கவுள்ளன. இதில், ஆஸ்திரேலியா வென்றாக வேண்டும். ஒரு வேளை போட்டி மழையால் ரத்தானாலோ அல்லது டை ஆனாலோ புள்ளிகள் பிரியும். அது ஆஸ்திரேலியாவுக்கே ஆபத்தாக முடியும்.

இந்தியாவுக்கும் சிக்கல்
நாளை இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன. அதில் இந்தியா வென்றாக வேண்டும். ஒரு வேளை போட்டி நடைபெறாமல் ரத்தானால் இரு அணிகளுக்கும் ஆளுக்கு ஒரு புள்ளி கிடைக்கும். நம்மிடம் நெட் ரன் ரேட் அதிகம் இருப்பதால் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் இலங்கை - பாகிஸ்தான் போட்டி முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.
இப்போதைக்கு வெற்றி அல்லது மழை நல்லது என்ற நிலையில் இந்தியா உள்ளது.


Click it and Unblock the Notifications