லண்டன்: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய போதிலும், 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த டெஸ்ட் தொடரில் பல தருணங்களில் இங்கிலாந்தை விட சிறப்பாகச் செயல்பட்டிருந்தும், இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்ததால், புள்ளிப் பட்டியலில் இந்தியாவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா, இலங்கை மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி முன்னிலையில் உள்ளன.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் 33.33 வெற்றி சதவீதத்தைப் பெற்று நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டு வங்கதேச அணிக்கு ஜோடியாக உள்ளது. வங்கதேச அணி ஐந்தாவது இடத்த்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று, 100% வெற்றி சதவீதத்துடன் முதலிடத்தில் வலுவாக உள்ளது.
இலங்கை: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி மற்றும் ஒரு டிராவுடன், 66.67% வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து: இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன், 66.67% வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா: 33.33% வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.
வங்கதேசம்: இலங்கைக்கு எதிரான தொடரில் ஒரு டிரா மட்டும் செய்ததன் மூலம், 16.67% வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ்: விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து, பூஜ்ஜிய வெற்றி சதவீதத்துடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இதுவரை இந்த 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் எந்த டெஸ்ட் போட்டியிலும் விளையாடாததால், புள்ளிப் பட்டியலில் இடம்பெறவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருப்பது அணிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும். இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெறத் தவறினால், புள்ளிப் பட்டியலில் நீண்ட காலத்திற்குப் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். இது வீரர்களுக்கு மனதளவில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.