டர்பன் : முதல் இன்னிங்ஸில் 205 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்தியா, தனது அபாரமான பந்து வீச்சால் தென் ஆப்பிரிக்காவை 131 ரன்களுக்கு சுருட்டி விட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியைச் சந்தித்த இந்தியா, டர்பனில் தனது 2வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் வழக்கம் போல இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். ஸ்டெயின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்கள் மளமளவென்று சரிந்தன.
இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 205 ரன்களை எடுத்தது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா களம் இறங்கியது. இந்திய பந்து வீச்சாளர்கள் ஜாகிர்கானின் வரவால் புத்த்துணர்ச்சியுடன் பந்து வீச்சில் இறங்கினர். ஜாகிர்கானின் அபாரமான பந்து வீச்சால் ஆரம்பத்திலேயே ஸ்மித் மற்றும் பீட்டர்சன் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இதனால் இந்தியாவுக்கு புது நம்பிக்கை கிடைத்தது.
இதையடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் தென் ஆப்பிரிக்கா விக்கெட்களை இழக்க ஆரம்பித்தது. ஜாகிர்கான் ஒருபக்கம் பயமுறுத்தினால், ஹர்பஜன் சிங் தனது அபாரமான சுழலால் தென் ஆப்பிரிக்காவை நிலை குலைய வைத்து விட்டார். சிறப்பாக பந்து வீசிய அவர் நான்கு விக்கெட்களைச் சாய்த்தார். ஜாகிர்கான் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இன்றைய பந்து வீச்சில் ஜாகிர்கான்தான் படு சிறப்பாக பந்து வீசினார். அதேபோல ஹர்பஜன் சிங்கும் அனல் பறந்தது.
இறுதியில், 131 ரன்களுக்கு இன்னிங்ஸை இழந்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 74 ரன்கள் முன்னிலை கிடைத்துள்ளது.