பெங்களூர்: தினமும் மழை பொழிவை சந்தித்து வரும் பெங்களூரிலுள்ள சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி தொடங்க உள்ளது. எனவே பிட்ச் பகுதியை உலர்வாக வைத்திருப்பதற்காக, தீமூட்டி வெப்பப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் மழையில்லை என்றபோதிலும், இரவு பயங்கர மழை கொட்டித் தீர்த்தது. இன்றும் மாலைவரை மழையில்லை என்றபோதிலும், தூரல் விழுந்தது.

எனவே பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்திலுள்ள பிட்ச், ஈரத்தன்மையோடு இருக்கிறது. இந்த மைதானத்தில்தான் நாளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பலப்பரிட்சை நடத்த உள்ளது.
எனவே கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளரும், மாஜி வீரருமான பிரிஜேஷ் பட்டேல் ஒரு ஐடியா கொடுத்துள்ளார். அதன்படி, பிட்ச் அமைந்துள்ள இடத்தில், சிறு டென்ட் அமைக்கப்பட்டு, மழை நீர் விழாமல் பார்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூரில் கடும் குளிர் நிலவுவதால், அந்த ஈரப்பதம் பிட்ச்சை பாதித்துவிடும் என்பதால், அதை உலர வைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிட்சில் தீமூட்டி, வெப்பம் கொடுக்கப்படுகிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இதுபோன்ற முயற்சி எடுக்கப்படுகிறது. சில நேரங்களில் இஸ்திரி பெட்டியை வைத்து பிட்சை சூடேற்றியுள்ளனர். ஆனால் நெருப்பு மூட்டியது இது முதல்முறை. இதை பார்க்க பிட்சில் யாகம் வளர்ப்பதை போல இருந்தது.
மொகாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் இருந்தது. மூன்றே நாட்களில் டெஸ்ட் போட்டி முடிந்தது. எனவே பிட்ச் தன்மையை சீராக வைத்திருக்க சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடிய பிட்ச் பராமரிப்பாளர் கே.ஸ்ரீராம் முழு வீச்சில் களமிறங்கியுள்ளார்.