அதகள பேட்டிங்.. அட்டாக் பவுலிங் - இந்திய அணி பலத்தை சிலாகிக்கும் பார்த்திவ்
மும்பை: அடேங்கப்பா.. என்னா டீம்யா இது! என்று இங்கிலாந்து செல்லும் இந்திய அணியை பார்த்து நம்ம பார்த்திவ் பட்டேல் பலமா கண்ணு வச்சிருக்கார்.
கொரோனா கோலம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால், சோர்ந்து போயிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் ஒரே ஆறுதலாக அமைந்திருப்பது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிப் போட்டியும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரும் தான்.
இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து, இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் ஆக., 4ம் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி, ஜூன் மாதம் மாதம் 2ம் தேதி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது.

20 சூரர்கள்
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜின்க்யா ரஹானே(துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரிதிமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல் ஆகியோர் அடங்குவர்.

டெப்த் லைன் அப்
இந்த வீரர்கள் பட்டியல் குறித்து சிலாகித்துள்ள முன்னாள் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல், "ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, அஜின்க்யா ரஹானே, புஜாரா, ரிஷப் என்று இங்கிலாந்தில் சிறப்பாக பேட்டிங் பண்ணக் கூடிய பேட்ஸ்மேன்ஸ் இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ரன்களை குவிக்க வாய்ப்புண்டு. கேஎல் ராகுலே ஸ்பேர் பேட்ஸ்மேனா வெளியே உட்கார்ந்து இருக்கார்-னா அப்போ பேட்டிங் எவ்ளோ டெப்த்-ஆ இருக்கு-னு பாருங்க" என்று தெரிவித்திருக்கிறார்.

செம டீம்
தொடர்ந்து பேசிய பார்த்திவ், "அப்படியே ஃபாஸ்ட் பவுலர்ஸ் பக்கம் வந்தால், பும்ரா, இஷாந்த், ஷமி இருக்காங்க. ஒருவேளை இவங்கள்-ல யாருக்காச்சும் காயம் ஏற்பட்டா, அணியை தாங்கிப் பிடிக்க முகமது சிராஜ், உமேஷ் யாதவ் இருக்காங்க. ஸ்பின் பக்கம் வந்தோம்-னா, இந்தியாவுல சமீபத்துல நடந்த இங்கிலாந்துக்கு எதிரான சீரிஸ்-ல ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலா வந்து 'Man of the Match' விருதுகளை அள்ளிய அக்ஷர் படேலும் இந்த தொடரில் உள்ளார். அதேசமயம் ஜடேஜாவும் வந்துட்டார், அஷ்வினும் அணியில் இருக்கார். இதைவிட வேற என்ன வலிமையான டீம் வேணும், கப் ஜெயிக்க? என்றார்.

அடிஷ்னல் ஸ்ட்ரென்த்
இந்த வீரர்கள் மட்டுமின்றி, அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், அர்ஸன் நாக்வஸ்வாலா ஆகிய நால்வரும் மாற்று வீரர்களாக அணியில் உள்ளனர். இதில், அபிமன்யு ஈஸ்வரன் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அதேபோல், 23 வயதான குஜராத்தைச் சேர்ந்த பவுலரான நாக்வஸ்வாலா 16 முதல்தரப் போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications