மும்பை: ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியதோடு, சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியும் இருவருக்கும் இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை துபாயில் நடக்கவுள்ளது. இந்த ஆசியக் கோப்பைத் தொடரில் மொத்தமாக 8 அணிகள் பங்கேற்க உள்ளதால், 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இருப்பதால், ரசிகர்கள் மத்தியில் அந்தப் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இரு அணிகளும் மோதவிருப்பதால், இரு நாடுகளின் தலைவர்கள் மத்தியிலும் கூட அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணிக்கு துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா, பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
ஐபிஎல் தொடரில் ரூ.26.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், கேப்டனாக முன் நின்று 600 ரன்களுக்கு மேல் விளாசியதோடு பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார். அதேபோல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக அரைசதங்களாக விளாசி, 559 ரன்களை விளாசி தள்ளினார். இவர்கள் இருவருமே சுப்மன் கில்லை விட அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளனர்.
ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சாதித்திருப்பதால், நிச்சயம் இடம் கிடைக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனாலும் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரையும் தேர்வு செய்யாமல் நிராகரித்துள்ளனர். இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது.