மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழக வீரர் அஸ்வின், வாசிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. உலக கோப்பை தொடருக்கு முன்பாக மேலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பதாக தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகார்கர் அறிவித்துள்ளார்.

இந்த தொடரில் கேப்டனாக ராகுல் செயல்படுவார் என்றும், துணை கேப்டனாக ஜடேஜா செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாடுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தொடக்க வீரராக தொடர்கிறார்.
மேலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கும், திலக் வர்மாவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இசான் கிஷன், சூர்யகுமார் யாதவ்,ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் இந்த தொடரில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி வேகப்பந்துவீச்சாளராக இடம்பெற்றுள்ளனர். 21 மாதங்களுக்கு பிறகு தமிழக வீரர் அஸ்வின் ஒருநாள் கிரிக்கெட்டில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி ஒருநாள் போட்டியில் ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த தொடர் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி - கேஎல் ராகுல் ( கேப்டன்), ஜடேஜா ( துணை கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், இசான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ரா,சிராஜ், முகமது சமி, திலக் வர்மா, பிரசித் கிருஷ்ணா, அஸ்வின், வாசிங்டன் சுந்தர் (ரோகித், கோலி, ஹர்திக் கடைசி போட்டியில் விளையாடுவார்கள்)