மும்பை : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வரும் 27ஆம் தேதி முதல் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது.
பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தலைமை ஏற்று உள்ள நிலையில் அவர் பங்கு பெறும் முதல் தொடர் இதுவாகும் இதனால் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எந்தெந்த வீரர்கள் இடம்பெற வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

டி 20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் தற்போது மிகப்பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது. 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு சூரியகுமார் யாதவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாகவும், இதனால் ஹர்திக் பாண்டியா இன்று தொடரில் கேப்டனாக இருக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அது மட்டுமல்லாமல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக களம் இறங்கிய இந்திய அணியில் பெரும்பான்மையான வீரர்கள் இந்த தொடரிலும் விளையாட கூடும் என்று செய்திகள் வெளியாகிறது. எனினும் ரியான் பராக் போன்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்படலாம். சூரியகுமார் யாதவ் தலைமையில் சஞ்சு சாம்சன், கில், ருதுராஜ், அபிஷேக் ஷர்மா,ஹர்திக் பாண்டியா, ஆவேஷ் கான், ரவி பிஸ்னாய் போன்ற வீரர்கள் இடம் பெறலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடரில் கே எல் ராகுல் இந்திய அணி கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. விராட் கோலி, ரோகித் சர்மா,ஹர்திக் பாண்டியா ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு பதிலாக ஜெய்ஸ்வால், ருதுராஜ், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் போன்ற வீரர்களும் ஒரு நாள் போட்டியில் இடம் பெற கூடும்.