மும்பை: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது என பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கில் உலகின் நம்பர் ஒன் வீரராக இருந்தாலும் தற்போது டி20 கிரிக்கெட்டில் போதிய அளவு ரன்கள் சேர்க்கவில்லை.
இதனால் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த டி20 உலக கோப்பையிலும் இதே நிலை ஏற்பட்டதாகவும் அகர்கர் வருத்தத்துடன் கூறியுள்ளார். மேலும் விளக்கம் அளித்துள்ள அவர், கில் நீக்கப்பட்டது பார்ம் காரணமாக இல்லை என்றும் அவர் தரமான வீரர் என்பதால் ரன்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அணியின் காம்பினேஷனை மனதில் வைத்துக் கொண்டு இந்த மாற்றம் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். அணியில் 15 வீரர்களுக்கு மட்டும்தான் இடம் இருக்கும் என்றும் தொடக்க வீரராக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அணியில் விளையாடும் போது கூடுதலாக ஒரு பவுலரையோ, இல்லை ஆல் ரவுண்டரையோ பயன்படுத்த வாய்ப்பு கிடைப்பதாக அகார்கர் விளக்கம் அளித்துள்ளார்.
15 பேர் கொண்ட அணி என்பதால் மட்டுமே கில்லுக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் அதற்காக அவர் நல்ல வீரர் என்று அர்த்தம் இல்லை என்றும் கூறியுள்ளார். சுப்மன் கில்லுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நன்றாக தெரியும் என்றும் அதனை அவர் செய்வார் என்றும் தாம் நம்புவதாக கூறியுள்ளார். கில் மட்டும் இல்லாமல் ஜெய்ஸ்வாலும் இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றும் அவரும் திறமை வாய்ந்த வீரம் தான் என்றும் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள சூரியகுமார் யாதவ், காம்பினேஷன் காரணமாக தான் கில் இடம்பெறவில்லை என்று கூறியுள்ளார். கில் உலகின் சிறந்த வீரராக இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ள அவர், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தொடக்க வீரராக வரவேண்டும் என்றும் இதன் மூலம் அணியில் புதிய காம்பினேஷன்களுக்கு இடம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஆகியோர் அதனால் தான் டி20 உலக கோப்பையில் தற்போது தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதன் மூலம் கீழ் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரருக்கு கூடுதலாக வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.