மும்பை: டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பல்வேறு ஆச்சரிய அறிவிப்புகளை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் வழங்கினார். சுப்மன் கில் டி20 அணியில் சேர்க்கப்பட்டதால் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது.
மேலும் கில்லும் தொடர்ந்து டி20 போட்டிகளில் தடுமாறி வந்தார். இதனால் அவர் நீக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்தனர். ஆனால் துணை கேப்டனை எப்படி நீக்குவது என்ற கேள்வி எழுந்தது. தற்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் கில் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் இந்த தேர்வு முடிவை நான் மனதார வரவேற்கின்றேன். இதற்கு நான் பத்துக்கு பத்து மதிப்பெண் கூட வழங்குவேன். கில்லை பொருத்தவரை இது அவர்களுக்கு இறுதி கிடையாது.
தற்போது அணியில் ஏற்பட்டிருக்கும் சூழலில், காம்பினேஷன் தான் மிகவும் முக்கியம் என்ற மனநிலையில் தேர்வு குழு வந்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ரிங்கு சிங்கும் அணியில் வந்திருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். அதேபோன்று இசான் கிஷன் அணிக்கு வந்திருக்கின்றார். இதன் மூலம் அணியில் வாய்ப்பு கிடைத்தால் அவர் விளையாடுவார்.
நான் அவரை ரிசர்வ் வீரராக இருப்பார் என்று எதிர்பார்த்தேன். இன்னும் தற்போது அணியில் இடம் கிடைத்திருக்கிறது. அதுவும் நல்ல பார்மில் இருக்கின்றார். ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் ஜித்தேஷ் சர்மா போன்ற ஒரு வீரர் தேவை இல்லை.
சுப்மன் கில் போன்ற ஒரு வீரர் உங்களுக்கு இல்லை என்றால் தொடக்கத்தில் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. இதனால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். அதே போன்று அக்சர் பட்டேலுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரு நல்ல முடிவு என்று நான் கருதுகிறேன் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.