For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஷேவாக்குக்கு நோ பால்-தானே பொறுப்பேற்பதாக சங்கக்காரா அறிவிப்பு

Sangakkara and Dilshan
தம்புல்லா: இந்திய வீரர் வீரேந்திர ஷேவாக் சதம் அடிக்காமல் தடுக்க இலங்கை அணியின் கேப்டன் சங்கக்காராவும், மூத்த வீரர் திலகரத்னே தில்ஷனும்தான், நோ பால் போடுமாறு பந்து வீச்சாளர் சூரஜ் ரந்தீவை வற்புறுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இச்சம்பவத்திற்கு தானே பொறுப்பேற்பதாக சங்கக்காரா கூறியுள்ளார்.

ஒரு வீரரின் சதத்தைத் தடுக்க இவ்வளவு கேவலமாக நடந்து கொண்ட செயல் இதுவரை கிரிக்கெட் உலகம் அறியாததாக கருதப்படுகிறது.

தம்புல்லாவில் நடந்த ஒரு நாள் போட்டியில் ஷேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரந்தீவ் வீசிய பந்தை அடித்தார். அது சிக்சருக்குப் போனது. ஆனால் அந்தப் பந்து நோ பால் என நடுவர் அறிவித்தார். வீடியோ கிளிப்பிங்குளைப் பார்த்தபோது வேண்டும் என்றே வெளியில் வந்து பந்தை வீசியிருந்தார் ரந்தீவ் என்பது தெரிய வந்தது.

ரந்தீவின் இந்த செயலை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் பல முன்னணி முன்னாள் வீரர்களும், ரந்தீவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதையடுத்து ரந்தீவ் ஷேவாக்கை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்திய அணியிடம் மன்னிப்பு கேட்டது. தற்போது ரந்தீவ் விவகாரம் தொடர்பான விசாரணையில் இலங்கை நிர்வாகம் இறங்கியுள்ளது.

சங்கக்காரா-தில்ஷன்:

இதற்கிடையே, கேப்டன் சங்கக்காராவும், தில்ஷனும்தான் ரந்தீவை நோ பால் போடுமாறு கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து ஸ்டம்ப் மைக்ரோபோன் பதிவை ஆராய இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து, அதை போட்டியை ஒளிபரப்பு செய்த டிவி நிறுவனத்திடம் கோரியுள்ளது.

தனது பெயர் அடிபடுவது குறித்து சங்கக்காரா விளக்குகளையி்ல் பந்தை லூசாக போடாமல் இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறும், ஷேவாக் ரன் எடுக்க அனுமதிக்காத வகையில் பந்து வீச்சை இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுமாறு மட்டும்தான் கூறினேன். மற்றபடி நோ பால் போடுமாறு நான் சொல்லவில்லை என்று கூறினார்.

இருப்பினும் ரந்தீவ் நோ பால் வீசியது வேண்டும் என்றேதான் என்பது உறுதியாகியுள்ளது. அதை அவராக செய்தாரா அல்லது சங்கக்காரா கூறி செய்தாரா என்பதுதான் இப்போது அறியப்பட வேண்டியதாகும்.

இதற்கிடையே திலகரத்னே தில்ஷன்தான் வேண்டும் என்றே நோ பால் வீசுமாறு ரந்தீவுக்கு யோசனை தெரிவித்ததாக ஒருதகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இலங்கையின் தி ஐலன்ட் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், ரந்தீவிடம் நோ பால் போடுமாறு தில்ஷன்தான் யோசனை தெரிவித்துள்ளார்.

அப்போது கவர் பாயின்ட்டில் அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில், சூரஜ் ரந்தீவை பார்த்து சிங்களத்தில் சத்தமாக ஓனே நாம், நோ பால் ஏகாக் தன்னா புல்வான் (நீ விரும்பினால், பேசாமல் நோ பால் போட்டு விடு) என்று கூறினார் தில்ஷன். அவர் அப்படிக் கூறியபோது அருகில் இருந்த எந்த வீரரும் அதைத் தடுக்க முன்வரவில்லை என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஐபிஎல் அணியான டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் தில்ஷன். இந்த அணியில் ஷேவாக்கும் முக்கிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வீரர் போடவிருந்த சதத்தைத் தடுக்க இவ்வளவு மலிவான முறையில் ஒரு அணி சதி செய்தது உலகிலேயே இதுவே முதல் முறையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

பொறுப்பேற்கிறேன்-சங்கக்காரா:

இதற்கிடையே, இந்த அசிங்கமான நிகழ்வுக்கு தானே பொறுப்பேற்பதாக சங்கக்காரா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கிரிக்கெட்டில் சில விஷயங்களை அதிரடியாக செய்து எதிரணிக்கு நெருக்கடி கொடுப்பது வழக்கமானது தான் அது போட்டியில் ஒரு அங்கமாக இருக்கும்.

ஆனால் இப்போது எழுந்துள்ள நோ பால் விவகாரம் வேறு மாதிரியானது. இது தவறானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நான் அணியின் கேப்டன் என்ற முறையில் நடந்த தவறுக்கு நானே முழு பொறுப்பு ஏற்கிறேன். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தை இப்போது இலங்கை கிரிக்கெட் சங்கம் கையில் எடுத்துள்ளது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

பிஷன் சிங் பேடி பாய்ச்சல்:

ரந்தீவின் செயல் குறித்து இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி கூறுகையில்,

ரன்தீவ் நடந்து கொண்ட விதம் எல்லோரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது விளையாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தி உள்ளது. ஒரு சிறந்த வீரர் இப்படி நடந்து கொள்ள மாட்டார். அவர் மோசமாக நடந்து தன்னை தரம் தாழ்த்தி கொண்டார். இதில் சதி நடந்து உள்ளது.

இதற்கு அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். அவரை 5 போட்டிகளில் இருந்து நீக்கி வைக்க வேண்டும் என்றார் காட்டமாக.

கிரிக்கெட் பிரியரான சசிதரூரும் கூட இந்த சம்பவத்தை கண்டித்துள்ளது. ட்விட்டர் மூலம் அவர் விடுத்துள்ள செய்தியில், நோ பால் ரன்னை வீரரின் ரன்னோடு சேர்க்காதது முட்டாள்தனமான விதி. இதனால்தான் ஷேவாக் 100 ரன் எடுக்கா மல் போய்விட்டது. ரந்தீவ் மோசமாக செயல்படுவதற்கும் இந்த விதிதான் காரணம் என்று கூறியுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:40 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+